Friday, April 07, 2006

பத்திரிகைகளைப் புரிந்து கொள்வோம்

தீவிரமடையும் பிரச்சாரம்... பத்திரிகைகளை அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பு

இன்றைய (ஏப்ரல் 8 2006) ஆய்வுக்குரிய நான்கு இதழ்களிலும் இடம் பெற்றுள்ள தேர்தல் அரசியல் தொடர்புடைய செய்திகளாக, மூன்று விஷயங்களைச் சொல்லலாம்:1. தேமுதிக கட்சியின் தேர்தல் அறிக்கை2. நக்கீரன் இதழ் மீதான தடை நீக்கம்3. பசுபதி பாண்டியன் மீதான கொலை முயற்சியூம், அவரது மனைவி கொலையும்
தேமுதிக கட்சியின் தேர்தல் அறிக்கையை தினமலரும், தின மணியும் முதல் பக்கச் செய்திகளாக்கியுள்ளன. தினகரன், மிகச் சுருக்கமாக 7ஆம் பக்கத்திலும், தினத்தந்தியும் 7ஆம் பக்கத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.
பசுபதி பாண்டியன் மீதான கொலை முயற்சியை, தினத் தந்தி மட்டுமே முதல் பக்கச் செய்தியாக்கி இருக்கிறது. தினமலரில் கடைசிப் பக்கத்திலும், தினமணியில் 4 ஆம் பக்கத்திலும், தினகரனில் 3ஆம் பக்கத்திலும் இச்செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
யானை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்ற அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் பேட்டியும், அக்கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலும் தினமணியில் மட்டும் (5ஆம் பக்கத்தில் ) வெளியாகி உள்ளன. தினமலரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சுரேஷ் மானேயின் பேட்டியும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் 15ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக பத்திரிகைகள் புதிய தமிழகம் கட்சியின் செய்திகளைப் புறக்கணிட்து வருகின்றன என்று கருத இடமிருக்கிறது.
வழக்கம்போலவெ, இன்றும், தயாநிதி மாறன், ஸ்டாலின் பேச்சுக்கள் தினகரனில் வெளியாகியுள்ளன. வைகோவின் பேச்சு, தினகரன் தவிர பிற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
இலவச கலர் டி வி சாத்தியம் என்ற கருணாநிதியின் அறிக்கை, தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது. ஆற்காட்டில், ராமதாஸ் பேசிய பேச்சு, தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் மாற்றியமைக்கப் பட்ட சுற்றுப் பயணத் திட்டமும் தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது.
தவிர, தினகரன், இலவச கலர் டி வி யை எதிர்ப்பவர்கள் யார் என்ற மக்கள் கருத்தை வெளியிட்டுள்ளது. தினமலர், கருணாநிதி 30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த ஒரு வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதை 1971ல் வெளிவந்த முரசொலி செய்தியை ஆதாரமாகக் கொண்டு, கலர் டிவியும், ரூ 2 அரிசியும் கூட இப்படிப்பட்ட வாக்கூறுதிகள் தான் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. தினமணியும், தன் பங்கிற்கு, திருநெல்வேலியில் பிள்ளைமார் சமுதாயம் கொதித்துப் போயிருப்பது போன்ற தோற்றத்தை, ஆதாரமில்லாத தகவல்களுடன் கட்டுரையாக் வெளியிட்டுள்ளது. தினத் தந்தி வைகோவின் பேச்சுக்களை விரிவாக வெளியிட்டிருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள சிறப்பு எக்ஸ்க்ளூசிவ் கட்டுரைகள் மூலம் மட்டுமே, ஒரு பத்திரிகை என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. ஒரு நாள் ஒரு கட்டுரையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப் படவில்லை, தொடர்ந்து ஒரு வார காலம் கூர்ந்து கவனித்ததன் விளைவே இந்த முடிவாகும்.
இனி இன்று வெளியாகி யுள்ள செய்திகளை ஒவ்வொரு நாளிதழ் வாரியாகப் பார்க்கலாம்:


தினமலர்:


விஜயகாந் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் "குடும்ப நல நிதி", தேர்தல் அறிக்கையில் விஜயகாந் "தாராளம்", என்பது லீட் ஸ்டோரியின் துணைத் தலைப்பாக உள்ளது.
தயாநிதி மாறன் மீது வைகோ அடுத்த புகார் என்ற தலைப்புடன், முதல் பக்க்த்தில் செய்தி ஒன்று தினமலரில் இடம் பெற்றுள்ளது. வைகோவின் அந்தப் பேச்சில் தினமலர் பற்றியும், தினகரன் பற்றியும், தினத்தந்தி பற்றியும் குறிப்பிடப் பட்டிருப்பதால், அந்தச் செய்தியை முழுமையாக இங்கே அப்படியே தருகிறோம்:


மத்திய அமைச்சர் தயாநிதி வகிக்கும் துறையின் அதிகாரத்தின் கீழ்வரும் "செபி'யில்,நெட்ஒர்க் கேபிள் சொல்யூசன் என்ற புதிய கம்பெனி அவரது அண்ணன் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கம்பெனியில் 91 சதவீத பங்குகள் அவருக்கும் 9 சதவீதம் அவரது
மனைவிக்கும் கணக்கு காட்டப்பட்டுள்ளது என கம்பம் பொதுக் கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க., 13 ஆண்டு கடும் சோதனைகளுக்கு பிறகு இந்த தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க., அணியில் எங்களை நசுக்கப் பார்த்தார்கள். நம்ப வைத்து கழுத்தறுத்து விடுவார்கள் என்று தொண்டர்கள் எச்சரித்தார்கள். நான் கூட அங்கேயே இருந்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் கன்னியாகுமரி மாவட்டசெயலாளர் ரத்தினராசை, கருணாநிதி தொலைபேசியில் அழைத்து, உன்னை அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் நிறுத்தலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே அந்த தகவல் எனக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இதுமாதிரி வேலையில் கருணாநிதி இறங்கியிருப்பதாக தெரிந்தவுடன் தான் கூட்டணியை விட்டு விலக நேரிட்டது.
மகாபாரத யுத்தத்தில் அந்த 18 நாள் யுத்தம் முக்கியமானது. கண்ணன் தூது பலனளிக்காமல் போனதும், நீ யுத்தத்திற்கு தாம்பூலம் கொடுத்து விட்டாய் என்று கூறிவிட்டு வருவான். அதே போல் நான் உங்களை சும்மா விட மாட்டோம் 42 நாட்கள் நான் நடந்த நடைபயணத்தை கேலி செய்து முரசொலியில் கடிதம் எழுதினீர்கள். என்ன காரணம்? திருவாரூர் பகுதியில் மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. நேரில் கேட்டதற்கு கோபத்தில்
எழுதி விட்டேன் என்றீர்கள். இன்று, கலர் டி.வி கொடுப்பதாõக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளீர்கள். அதற்கு 15 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று முதல்வர் கூறுகிறார்.
கிலோ அரிசி ரூ. 2 க்கு கொடுக்கப்படும் என்கிறீர்கள். ஒரு கோடியே 50 லட்சம் ரேஷன் கார்டுகள் தான் உள்ளது என்று தவறான தகவல்களை சொல்கிறீர்கள். நீங்கள் கொடுத்தது ஒரு கோடியே 50 லட்சம் கார்டுகள். தற்போது உள்ளது ஒரு கோடியே 88 லட்சம் கார்டுகள். சன் "டிவி'யின் இன்றைய சொத்து மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய். அதில் 10 சதவீத பங்குகளை விற்கப்பட்டன. அதாவது 800 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டன.
கலாநிதிக்கு ரூ. 5 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. கருணாநிதி பங்கு ரூ. 100 கோடி என்றும் அதில் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு ரூ.5 கோடியை மட்டும் பாங்கில் போட்டுள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். மொத்தம் 8 ஆயிரம் கோடியில் உங்கள் பங்கு 100 கோடி தானா? உங்களுக்கே உங்கள் பேரன் பட்டை நாமம் போட்டு விட்டாரா? அல்லது நீங்கள் இருவரும் சேர்ந்து வருவமான வரித்துறைக்கு பட்டை நாமம் போடுகிறீர்களா? மத்திய அமைச்சர், தன்னுடைய இலாகா சம்பந்தப்பட்ட தொழில் எதிலும் ஈடுபடக் கூடாது
என்பது மரபு. ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி, அண்ணன் கலாநிதிக்கு "செபி'யில் நெட்ஒர்க் சொல்யூசன் என்ற கம்பெனியை பதிவு செய்துள்ளார். இதில் கலாநிதிக்கு 91சதவீத பங்குகள்.அவருடைய மனைவி பெயரில் 9 சதவீத பங்குகள் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. தினகரன் பத்திரிகையை ரூ. 300 கோடிக்கு வாங்கி, தற்போது ஒரு ரூபாய்க்கு விற்பனை
செய்கிறார்கள். எதற்கு? தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவா?
இதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு வைகோ பேசினார்.
நக்கீரன் மீதான தடை நீக்கம் என்ற செய்தி தினமலரில் 2ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ஜெயலைதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பற்றி கட்டுரைகள் வெளியிட நக்கீரன் இதழுக்கு விதிக்கப் பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நேற்று நீக்கியது, என்பதே அந்தச் செய்தியின் முகப்புரையாகும்.
திருமாவளவன் சிதம்பரத்தில் பேசிய பேச்சு, தினமலரின் 2ஆம் பக்கத்தில் 2 பத்திச் செய்தியாக இடம் பெற்றுள்ளது.

"நான் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானால், சினிமாவில் நடிக்க மாட்டேன்:விஜயகாந்", என்ற தலைப்பிலான செய்தி தினமலரில் 3ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

"கருணாநிதியின் கவர்ச்சி அறிவிப்புக்கு இது உதாரணம், 30 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பகற்கனவு தான்", என்று ஒரு செய்தி தினமலரில் 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. 1.1.1976 முரசொலி செய்தியை மேற்கோள் காட்டி இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. சென்னை ராமேசுவரம் வரை பயணம் செய்ய பயணிகள் கப்பல் வாங்கப்படும் - சுற்றுலா வர்த்தகப்பொருட்காட்சியை தொடங்கி வைத்து கலைஞர் உரை என்ற செய்தியை மேற்கோள் காட்டி, கீழ்க்கண்ட விமர்சனத்தையும், தினமலரின் சிறப்பு நிருபர் முன்வைத்திருக்கிறார்:


"திமுக தேர்தல் அறிக்கை மொத்தம் 84 பக்கங்கள் கொண்டது என்றால், அதில் காணப்படும் கிலோ ரூ 2 அரிசித் திட்டம், இலவச டிவி திட்டம் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதப் பட்ட விமர்சனங்களைத் திரட்டி வெளியிட்டால் அது 84 பக்கத்தை நிச்சயம் விஞ்சி
விடும். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதும், "கவர்ச்சி" அறிவிப்பை வெளியிடுவார் என்பதற்கு "கப்பல் விடும் அறிவிப்பு", ஓர் உதாரணமாகும்".


சமாஜ்வாடி கட்சி தலைமையில் ஒன்பது கட்சி கூட்டணி
சென்னை: "சமூகநீதி முன்னணி' என்ற பெயரில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைமையில் புதிதாக ஒன்பது கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
“சமாஜ்வாடி கட்சி தலைமையில் ஒன்பது கட்சி கூட்டணி” என்ற செய்தி தினமலரில் 5 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் முகப்புரை வருமாறு:

சென்னை: "சமூகநீதி முன்னணி' என்ற பெயரில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைமையில் புதிதாக ஒன்பது கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு "ஞாபக மறதி' அதிகம் : நினைவூட்டுகிறார் குண்டு கல்யாணம் என்ற தலைப்புடன் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க., நடிகர் குண்டு கல்யாணம் அளித்த சிறப்புப் பேட்டி தினமலரில் இடம் பெற்றுள்ளது.

பசுபதி பாண்டியன் மனைவி சுட்டுக் கொலை, தூத்துக் குடி அருகே பட்டப்பகலில் பயங்கரம், தாகுதலில் தப்பியவர்கள் போலீசில் தஞ்சம் என்ற செய்தி தினமலரின் நெல்லை பதிப்பின் சப்ளிமென்டின் கடைசிப் பக்கத்தில் இடம் பெற்றுள்லது.


தினகரன்:

வேட்புமனு தாகலுக்கு இன்னும் ஐந்தே நாள், களத்தில் 1024 வேட்பாளர்கள் - பிரசாரம் களை கட்டுகிறது, என்பது இன்றைய தினகரனின் லீட் ஸ்டோரியாகும்.

பசுபதி பாணிட்யனைக் கொல்ல முயற்சி என்ற தலைப்புடன் தினகரனில் 3ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி அருகே நடுரோட்டில் பயங்கரம் என்ற முந்து தலைப்புடன் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி பிரச்னை, ஜெவுக்கு சிதம்பரம் சவால், என்ற செய்தி தினகரனில் 5ஆம் பக்கம் வெளியாகியுள்ளது.

இலவச கலர் டிவியை எதிர்ப்பவர்கள் யார்? என்ற தலைப்புடன், ஒரு மக்கள் கருத்து சேகரிக்கப்பட்டு தினகரனின் 6ஆம் பக்கத்தில் அரைப்பக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏழைகள் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்காகச் செலவழிப்பதை பணக்கார வர்க்கம் ஏன் எதிர்க்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது இக்கட்டுரை.

ரூ 1000, 2000 வெள்ள நிவாரணம், மத்திய அரசு தந்த நிதியை தான் கொடுத்தது என்கிறார் ஜெ. தயாநிதிமாறன் குற்றச்சாட்டு, என்ற செய்தி தினகரனில் 6 ஆம் பக்கம் வெளியாகி உள்ளது.
முதல்வர் பிரசார திட்டம் திடீர் மாற்றம், மதிமுக தொகுதிகள் மீண்டும் புறக்கணிப்பு என்ற செய்தி தினகரனில் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இலவச கலர் டிவி, ரூ 2க்கு அரிசி சாத்தியமாக்கிக் காட்டுவோம், கருணாநிதி மீண்டும் உறுதி என்ற கருணானிதியின் கேள்வி பதில் அறிக்கை, தினகரனில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

அரவாணிகளுக்கு அனைத்து சலுகைகள், தேமுதிக தேர்தல் அறிக்கை என்ற 2 பத்திச் செய்தி, தினகரனில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் உளவுத் துறை கிளப்பும் வதந்தி - ராமதாஸ் குற்றச் சாட்டு, என்ற செய்தி 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தை சுரண்டிய கொள்ளைக் கும்பலுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். பிரசாரம் தொடங்கி ஸ்டாலின் பேச்சு, 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.


ஜெ. வாழ்க்கை வரலாறு தொடர், "நக்கீரன்" வெளியிட கோர்ட் அனுமதி, 14 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி

தமிழகத்தில் 5 முனைப் பேட்டி - மனுத் தாகலுக்கு ஐந்தே நாள், என்ற தலைப்புடன் இன்றைய தினமணியின் லீட் ஸ்டோரி இடம் பெற்றுள்ளது.

ஏழைகளுக்கு 15 கிலோ இலவச அரிசி: தேர்தல் அறிக்கையில் விஜயகாந்த் உறுதி என்ற தலைப்புடன் தினமணியில் இடம் பெற்றுள்ள செய்தி வருமாறு:



தேமுதிக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தாம்
போட்டியிடும் விருதாசலத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். முக்கிய அம்சங்கள்:
மாதந்தோறும் ஏழைகளுக்கு 15 கிலோ இலவச அரிசி
ஏழை கர்ப்பிணிகள் கருவுற்ற காலம் முதல் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகள் வரை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் ஊட்டச்சத்து தொகையாக மாதம் தோறும் ரூ. 500.
ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ. 500 வீதம் குடும்பத் தலைவியின் பெயரில் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கில் குடும்ப நிதி.
ஏழைகளுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
கல்லூரி வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
வளர்ச்சிப் பணிகளுக்கு எல்லா கிராமங்களுக்கும் தலா
ரூ.25 லட்சம் அளவு குறையாமல் வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் இடம் விட்டு இடம் பெயரும் மாநில அளவில் செல்லத்தக்க நடமாடும் ரேஷன் அட்டை
கிராமந்தோறும் பொது கழிப்பிடங்கள் நலிவுற்ற மக்கள் சுயதொழில் தொடங்குவதற்கு எளிதில் கடன் கிடைக்க
தமிழ்நாடு வங்கி தொடங்கப்படும்.
மருத்துவ சிகிச்சைக்கு "உடல் நல அடையாள அட்டை'
பெண் சிசுக் கொலையைத் தடுக்க ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ. 10 ஆயிரம் வங்கியில் வைப்பு நிதி
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500
ஓய்வூதியம்.
5 ஆண்டுகளில் சுயவேலை வாய்ப்பை உருவாக்கி 1 கோடி 80 லட்சம் பேருக்கு வேலை உயர் கல்வியில் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசு ஒழுங்கு முறை வாரியம். தமிழ் ஆங்கிலம் அத்தோடு விருப்பப் படமாக 3-வது மொழி படிக்க ஏற்பாடு சத்துணவுடன் பால் கொடுத்து மழலையர் பள்ளிகள் அமைக்கப்படும்.
நவீன வசதிகளுடன் "புதிய சென்னை' லஞ்ச ஊழலை தடுக்க உயர்நீதிமன்ற தலைமையில் குழு. சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டுவரப்படும். இலவசமாக கீதை - பைபிள் - குர்ரான் வழங்கப்படும்.

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம், வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு: பசுபதி பாண்டியன் மனைவி படுகொலை. பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார் , 4 பேருக்கு அரிவாள் வெட்டு, என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.

நெல்லை தொகுதியில் பெரும்பான்மை வாக்காளர்கள் அதிருப்தி என்ற தலைப்புடன் ஒரு செய்தியை ப்.இசக்கி என்ற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். தினமணியின் 2 ஆம் பக்கத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. இச்செய்திக்கு ஆதாரமாக இவர் மேற்கோள் காட்டுவது வவுசி இளஞர் பேரவையின் சார்பில் திருநெல்வேலி நகர்ப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மட்டுமே.
பாளைக்கு ஒரு நீதி, நெல்லைக்கு ஒரு நீதியா? நெல்லை சட்டமன்ற தொகுதியின் பெரும்பான்மையான பிள்ளைமார் சமுதாயத்தை புறக்கணித்த அதிமுக திமுகவை வீழ்த்துவோம். சென்றமுறை மானம் இழந்தோம், இந்த முறை மரியாதை இழந்தோம், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, இழந்ததை மீட்போம், சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் கட்சி?, வ வு சி இளைஞர் பேரவை, தினுநெல்வேலி டவுண், என்று அந்த போஸ்டரில் உள்ள வாசக்கன்கள் கூறுகின்றன. இந்த போஸ்டரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தினமணியால், எப்படி சுமார் அரைப்பக்க அளவிற்கு ஒரு கட்டுரையைப் பிரசுரிக்க முடிகிறது என்பது வியப்புதான்.

தனது வாதங்களுக்கு ஆதாரமாக, ஒரு கூடுதல் தகவல், பேட்டி, புள்ளிவிவரம் எதையும் தரவில்லை இந்த செய்தியாளர். திருநெல்வேலி தொகுதியின் மொத்த வாக்களர்களில் 20% பேர் பிள்ளைமார் என்று இவராகவே ஒரு தகவலை முன் வைக்கிறார். யார் கொடுத்த புள்ளி விவரம் என்பதை வாசகனுக்குத் தரவேண்டாமா? தினமணியும், தினமலர், தினகரன் அளவிற்கு பொறுப்பற்றும், ஆதாரங்கள், மேற்கோள்கள் இல்லாமலும் செய்தி வெளியிட்டு வருகிறது என்பதற்கு இதைச் சான்றாகக் கருதலாமா?


சிவகங்கை மத்தியக் கூட்டுறவு வங்கி விவகாரம் - ஜெ. புகாருக்கு ப.சிதம்பரம் மறுப்பு, என்ற தலைப்பில் தினமணியின் 4 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு வாபஸ் என்றொரு செய்தி, தினமணியின் 4 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

யானை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி என்ற செய்தி தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சோதனைகளைச் சாதனைகளாக்கிய எனக்கு மீண்டும் வாய்ப்புத் தாருங்கள், மானமதுரையில் ஜெயலலிதா பிரசாரம், என்ற செய்தி தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மதுரை, விருதுனகர் மாவட்டங்களில் ஜெ. இன்று தேர்தல் பிரசாரம் என்ற செய்தி, தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தைரியமிருந்தால் என் மீது வழக்கு போட்லாம்: வைகோ, ஓராயிரம் ரகசியங்களை வெளிப்படுத்துவேன், என்ற செய்தி,
தினமணியின் 7 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தனியார் டி.வி. சேனல்கள் இலவசமாக கிடைக்கும்: அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு வலியுறுத்துமா? என்ற தலைப்பில் கே.எம். சந்திரசேகரன் எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையும், இன்று வெளியாகியுள்ள ப. இசக்கியின் கட்டுரையும், ஏறத் தாழ ஒரே மாதிரி தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு தனி நபரின் சொந்தக் கருத்து. இதை செய்திக் கட்டுரையைப் போல வெளியிடுவது அறமா? தனது வாதங்களுக்கு உரிய ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல், இப்படி தனது சொந்தப் பார்வையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழுதுதல் பத்திரிகை தர்மமாக்குமா?

கே.எம். சந்திரசேகரன் எழுதிய இக்கட்டுரையை அப்படியே கீழே தருகிறோம்.:



சென்னை, ஏப்.8: தனியார் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பை வீடுகளுக்கு இலவசமாக வழங்க திமுக ஏற்பாடு செய்யுமா என்று தேர்தல் பிரசாரத்தில் கேள்விகள் எழுப்புகின்றனர். இதை மத்திய அரசு செய்ய முடியும். அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு கோரிக்கைகள் வைக்க வேண்டும்.
இப்போது தூர்தர்ஷனின் டி.டி.எச். (வீடுகளுக்கே நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பில் எல்லா சேனல்களுமே இலவசமாகத் தான் கிடைக்கின்றன. அதில் எல்லா தனியார் சேனல்களுக்கும் இடம் தர வேண்டும் என்று
எல்லா அரசியல் கட்சிகளும் வலியுறுத்தினால் பொதுமக்கள் உண்மையான பலனைப் பெறுவார்கள்.
இப்போது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் மூலம் பெற்று வீடுகளில் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். இதற்கு மாதந்தோறும் ஆப்பரேட்டருக்கு பணம் கட்ட வேண்டியிருக்கிறது. ஆப்பரேட்டர்கள் உதவியின்றி தனியார் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க உதவி செய்கிறது டி.டி.எச். எனப்படும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு. வீட்டின் மாடியிலோ, பால்கனியிலோ ஓர் அடி விட்டம் உள்ள சிறிய டிஷ் ஆன்டனாவைப் பொருத்தினால் இந்த ஒளிபரப்பு சிக்னல்களை
செயற்கைக் கோள்களில் இருந்து நேரடியாகப் பெற முடியும். இந்த சிக்னலை செட்-டாப்-பாக்ஸ் மூலம் மாற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகப் பார்க்கலாம்.
இதற்கான டிஷ் ஆன்டனா, செட்-டாப்-பாக்ஸ் ஆகியவை வாங்க சுமார் ரூ.3500 செலவாகும்.
நிறைய பேர் வாங்கும் நிலை வந்தால் இதன் விலை பெருமளவு குறையும். ரூ.1500-க்கு இது கிடைக்கும் என்றால் எல்லோருமே இத் திட்டத்தை நாடுவர்.
டிஷ் ஆன்டனா, செட்-டாப்-பாக்ஸ் ஆகியவற்றுக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும். ஆப்பரேட்டருக்கு
மாதந்தோறும் பணம் கட்டும் பிரச்சினை ஏதும் இல்லாமல் காலம் முழுக்க இலவசமாக தனியார்
டி.வி. சேனல்களைப் பார்க்கலாம்.
இதிலும் கட்டணச் சேனல்களைப் பார்க்க மாதந்தோறும் நாம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதை நிர்வகிக்க சில தனியார் நிறுவனங்கள் டி.டி.எச். ஒளிபரப்பில் ஈடுபட்டுள்ளன.
தூர்தர்ஷன் தொடங்கியுள்ள டி.டி. பிளஸ் என்ற ஒளிபரப்பில் 33 சேனல்கள் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாமே இலவச சேனல்கள். இந்த ஒளிபரப்பைத் தேர்வு செய்தால் மாதந்தோறும் செலவு இனி கிடையாது.
இந்த ஒளிபரப்பில் சில தனியார் சேனல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழில் சன் டி.வி.யும், தூர்தர்ஷனின் பொதிகை சேனலும் இதில் உள்ளன. டி.டி. பிளஸ் பட்டியலில் தனியார் சேனல்களுக்கு இலவசமாகவே இடம் தரப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் இப் பட்டியலில் 50 சேனல்கள் இடம் பெற உள்ளன. எனவே, 10 தனியார் சேனல்கள் இதில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதில் ஜெயா டி.வி., ராஜ் டி.வி. உள்ளிட்ட தமிழ்
சேனல்களும் இடம் பெறுமானால், பெரும்பாலான மக்கள் பயன் பெறுவர்.
தமிழ் சேனல்கள் மட்டும் பார்ப்பவர்கள் டி.டி.எச். திட்டத்துக்கு மாறிவிட்டால், மாதச் செலவு இருக்காது.
கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் தனியார் சேனல்கள் எதுவும் இப்போது டி.டி. பிளஸ் பட்டியலில் இல்லை. எனவே, தமிழில் எவ்வளவு சேனல்களுக்கு இதில் இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை.
தமிழில் உள்ள சேனல்களை, பார்வையாளர் எண்ணிக்கை
அடிப்படையில் தரப்பட்டியல் தயாரித்து, முக்கியமான சேனல்களை மேற்படி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த எல்லா அரசியல் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும். இதில் தேர்தல் கால அரசியல் லாபம் எதையும் பார்க்காமல்
செயல்பட்டால், உண்மையில் தமிழக மக்கள் பயன்பெறுவார்கள்.


சாதித்தேன் என ஒரு திட்டத்தைக் கூட ஜெ சொல்ல முடியாது: ராமதாஸ் ஆர்க்காட்டில் நிருபர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

நக்கீரன் பத்திரிகையில் ஜெ. பற்றி கட்டுரை எழுதத் தடை நீக்கம் என்ற செய்தி தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

சிதம்பரம் பகுதியை சுற்றுலா மையமாக்குவேன் என்று விஜயகாந், சிதம்பரத்தில் பேசிய பேச்சு, தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

கருணாநிதி சுற்றுப் பயணத்தில் மாற்றம்: 27 நாள் பிரசாரம், சென்னையில் 10 நாள் என்ற செய்தி தினமணியின் 9 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

நாளை மௌனம் களைகிறார் சரத் குமார், என்ற செய்தி தினமணியின் 10ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தினத்தந்தி:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு கடும் கட்டுப் பாடு - அரசியல் கட்சிகளுக்கு 9 கட்டளைகள் - விதிகளை மீறினால் 2 ஆண்டு வரை ஜெயில் தண்டனை, என்ற செய்தி, இன்றைய தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாகும்.

தூதுக் குடி அருகே சினிமாவை மிஞ்சும் பயங்கரம், பசுபதி பாண்டியன் மனைவி துப்பாக்கியால், சுட்டு கொலை, 4 பேருக்கு அரிவாள் வெட்ட், வெடி குண்டு வீச்சு, பதட்டம். என்ற தலைப்புடன் இச்செய்தி முதல் பக்கத்திலும், தொடர்ச்சி, 8ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

நக்கீரன் பத்திரிகையில் வெளியாகும் ஜெயலலிதா, சசிகலா பற்றிய செய்திகளை அவர்களிடம் முன்னதாக தெரிவிக்க வேண்டும், ஐகோர்ட்டு உத்தரவு என்ற செய்தி தினத்தந்தியின் 3ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், விஜயகாந் கட்சி தேர்தல் அறிக்கை, என்ற செய்தி தினத்தந்தியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சற்று விரிவாக வெளியிடப் பட்டுள்ள இந்தச் செய்தியை முழுமையாக் வாசிக்க தினத் தந்தியின் http://www.dailythanthi.com/article.asp?NewsID=250445&disdate=4/8/2006&advt=1
என்ற முகவரிக்குச் செல்லலாம்.

மதிமுக எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்து பதவி பெற்ற திமுக மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும், ஆண்டிபட்டியில் வைகோ பேச்சு என்ற செய்தி தினத்தந்தியில் 9ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

கருணாநிதி மீது மேலும் பல குற்றச் சாட்டுகள்: ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன்: வழக்கு போட தயாரா? வைகோ ஆவேச பேச்சு என்ற செய்தி தினத்தந்தியின் 18 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது.

வைகோவின் பேச்சுக்களை தினத்தந்தி எவ்வாறு விரிவாக வெளியிட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள, இந்தப் பேச்சு தினத்தந்தியில் பிரசுரிக்கப் பட்ட படி அப்படியே தரப் படுகிறது.

கருணாநிதி மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்
ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன்; வழக்கு போட தயாரா? வைகோ ஆவேச பேச்சு


கம்பம், ஏப். 8-
``கருணாநிதி மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை
வைத்துள்ளேன். ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன். என் மீது வழக்கு போடுங்கள்''
என்று வைகோ ஆவேசமாக கூறினார்.

பிரசாரம்
ஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு அவர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் கம்பம் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்து வைகோ பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- அலை மோதுகிறது
தமிழக அரசியல் நிலை இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிகள் பலமாக இருப்பதாக ஒரு சில பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் ஜனநாயக மக்கள் கூட்டணியை தான் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என தமிழக முதல்-அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 31-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் பிரசாரத்தை தொடங்கினார். அவர் செல்லும் இடங்களில்
மக்கள் அமோக கூட்டமாக அலை, அலையாக திரளுகின்றனர். எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்
என்று மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நான் 8-வது நாளாக கூடலூரில் பிரசாரத்தை
தொடங்கி உள்ளேன். ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர தீர்மானித்து
விட்டார்கள்.

டிஸ்மிஸ்

கடந்த 1980-ஆம் ஆண்டு எம்.பி. தேர்தல் நடைபெற்றது.
அன்று இ.காங்கிரசும், தி.மு.க. வும் கூட்டணி அமைத்தது. 39 தொகுதிகளிலும் அந்த கூட்டணியினர் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் அப்போது முதல்- அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டவுடன் கருணாநிதி, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை வைத்தார். கருணாநிதியின் தொல்லையை தாங்க முடியாமல் பிரதமர் இந்திராகாந்தி வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். மக்களை சந்தித்து நியாயம் கேட்டார். மக்களும் சரியான தீர்ப்பினை
வழங்கினர். மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.

அரிசி விலை

அதே போன்று இப்போதும் எங்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். மத்திய அரசு அரிசி விலையை உயர்த்தக் கூடாது என்று தமிழக
முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் மத்திய அரசு உயர்த்தும் பட்சத்தில் அந்த வரி உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் என்றும் அந்த அரிசி விலை உயர்வு சுமையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,350 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தான் ரேஷன் அரிசி விலையை கிலோ ரூ.3.50-க்கு முதல்-அமைச்சர் வழங்கி
வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கைகள் குறிப்பாக தமிழக அமைச்சர்கள் 13 பேர் இருக்கும் போதே இவ்வாறு இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களே நீங்கள் எவ்வாறு ரேஷன் அரிசி கிலோ ரூ.2-க்கு கொடுக்க முடியும். தி.மு.க. ஆட்சியில் ஒரு
கோடியே 56 லட்சம் குடும்ப அட்டைகள் இருந்தன. 30 லட்சம் பேர் குடும்ப அட்டை இன்றி தவித்தனர். தற்போது முதல்-அமைச்சர் ஒரு கோடியே 88 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கி உள்ளார். இவ்வாறு இருக்கையில் நீங்கள் எப்படி அரிசி விலையை குறைத்து
போடுவீர்கள்? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் மீண்டும் ஏமாற தயாராக இல்லை.

ரகசியத்தை வெளியிடுவேன்

தி.மு.க.வில் துரும்பை கூட தூக்கி போடாத பேரனை தி.மு.க. தலைவர் கருணாநிதி எம்.பி. ஆக்கினார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஆக்கினார். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களே உங்கள் மீது இன்னும் பல
குற்றச்சாட்டுகள் வைத்துள்ளேன். ஓராயிரம் ரகசியத்தை வெளியிடுவேன். என் மீது வழக்கு தொடருங்கள். (இவ்வாறு 3 முறை ஆவேசமாக கூறினார். பொதுமக்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.)

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர்
தேக்க உச்சநீதி மன்றம் 142 அடி வரை தண்ணீரை தேக்க அருமையான தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அடுத்து உடனே கேரள சட்டசபையில் தனை எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றுகிறது. இதனை தட்டி கேட்க இங்குள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தெம்பு இல்லையா? குறிப்பாக தமிழக இ.காங்கிரஸ் மற்றும் கம்ïனிஸ்டு கட்சிகளும், தி.மு.க. தலைவரும் இந்த விஷயத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளை தட்டி கேட்காதது ஏன்?
தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்கின்ற துரோகத்தை தட்டி கேட்க அ.தி.மு.க.-ம.தி.மு.க. ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளியுங்கள். இந்த கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு வைகோ பேசினார்.
இந்த பிரசார தொடக்க கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தினகரன் எம்.பி., மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், கம்பம் நகர செயலாளர் நாகராஜ், ம.தி.மு.க. வக்கீல் நெப்போலியன், கூடலூர் பொன்முருகேசன், ஒன்றிய செயலாளர் அம்சராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4 comments:

அழகப்பன் said...

பத்திரிகைகளின் சார்பு நிலை ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும், ஒவ்வொரு நாளின் நிகழ்வையும் மற்ற பத்திரிகைகளுடன் ஒப்பிடும்போது சார்பு நிலை அப்பட்டமாகத் தெரிகிறது. நடுநிலை நாளிதழ் என்று இவை தங்களை சொல்லிக் கொள்வதுதான் வேதனை. இந்த சார்பு நிலை செய்திகளால் தமிழகத்தில் முஸ்லிம்கள் எந்த அளவு மனவேதனை அடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். தொடருட்டும் உங்கள் பணி.

பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யுங்கள். அப்படி செய்தால்தான் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் உங்கள் பதிவு காட்டப்படும்.

குழலி / Kuzhali said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி, இது மாதிரியான ஒரு மீடியா வாட்சர் கண்டிப்பாக தேவைப்படுகின்றது, செய்தியை செய்தியாக வெளியிடாமல் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்காமல் வெளியிடுகின்றன, இதற்கு வைத்துள்ள பெயர் 'ஊடக வன்முறை'.

Anonymous said...

I am a rare visitor of this site and occasionally happend to read this post. Good Job ! Well done!
Even I was thinking of writing such a post for a long time. But unable to do that. Still as a continous improvement, you can take one newspaper daily and unskin that. I am a regular reader of Dinamalar for the past few years. But nowadays its has become the worst of its kind. I will write in detail someother day about it.

Keep it up.

Regards
Satelite

Arulselvan said...

Hallo Satellite,
Thanks for your comment. We will try to take up a newspaper a day, soon. We agree that there is a scope for improving the method of review. Hope we will end up, after the elections, with a permanent arrangement to have a Media Watch for Tamil Newspapers.
Thanks again,
Media Watch Team.