Friday, April 07, 2006

பத்திரிகைகளைப் புரிந்து கொள்வோம்

தீவிரமடையும் பிரச்சாரம்... பத்திரிகைகளை அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பு

இன்றைய (ஏப்ரல் 8 2006) ஆய்வுக்குரிய நான்கு இதழ்களிலும் இடம் பெற்றுள்ள தேர்தல் அரசியல் தொடர்புடைய செய்திகளாக, மூன்று விஷயங்களைச் சொல்லலாம்:1. தேமுதிக கட்சியின் தேர்தல் அறிக்கை2. நக்கீரன் இதழ் மீதான தடை நீக்கம்3. பசுபதி பாண்டியன் மீதான கொலை முயற்சியூம், அவரது மனைவி கொலையும்
தேமுதிக கட்சியின் தேர்தல் அறிக்கையை தினமலரும், தின மணியும் முதல் பக்கச் செய்திகளாக்கியுள்ளன. தினகரன், மிகச் சுருக்கமாக 7ஆம் பக்கத்திலும், தினத்தந்தியும் 7ஆம் பக்கத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.
பசுபதி பாண்டியன் மீதான கொலை முயற்சியை, தினத் தந்தி மட்டுமே முதல் பக்கச் செய்தியாக்கி இருக்கிறது. தினமலரில் கடைசிப் பக்கத்திலும், தினமணியில் 4 ஆம் பக்கத்திலும், தினகரனில் 3ஆம் பக்கத்திலும் இச்செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
யானை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்ற அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் பேட்டியும், அக்கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலும் தினமணியில் மட்டும் (5ஆம் பக்கத்தில் ) வெளியாகி உள்ளன. தினமலரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சுரேஷ் மானேயின் பேட்டியும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் 15ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக பத்திரிகைகள் புதிய தமிழகம் கட்சியின் செய்திகளைப் புறக்கணிட்து வருகின்றன என்று கருத இடமிருக்கிறது.
வழக்கம்போலவெ, இன்றும், தயாநிதி மாறன், ஸ்டாலின் பேச்சுக்கள் தினகரனில் வெளியாகியுள்ளன. வைகோவின் பேச்சு, தினகரன் தவிர பிற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
இலவச கலர் டி வி சாத்தியம் என்ற கருணாநிதியின் அறிக்கை, தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது. ஆற்காட்டில், ராமதாஸ் பேசிய பேச்சு, தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் மாற்றியமைக்கப் பட்ட சுற்றுப் பயணத் திட்டமும் தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது.
தவிர, தினகரன், இலவச கலர் டி வி யை எதிர்ப்பவர்கள் யார் என்ற மக்கள் கருத்தை வெளியிட்டுள்ளது. தினமலர், கருணாநிதி 30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த ஒரு வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதை 1971ல் வெளிவந்த முரசொலி செய்தியை ஆதாரமாகக் கொண்டு, கலர் டிவியும், ரூ 2 அரிசியும் கூட இப்படிப்பட்ட வாக்கூறுதிகள் தான் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. தினமணியும், தன் பங்கிற்கு, திருநெல்வேலியில் பிள்ளைமார் சமுதாயம் கொதித்துப் போயிருப்பது போன்ற தோற்றத்தை, ஆதாரமில்லாத தகவல்களுடன் கட்டுரையாக் வெளியிட்டுள்ளது. தினத் தந்தி வைகோவின் பேச்சுக்களை விரிவாக வெளியிட்டிருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள சிறப்பு எக்ஸ்க்ளூசிவ் கட்டுரைகள் மூலம் மட்டுமே, ஒரு பத்திரிகை என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. ஒரு நாள் ஒரு கட்டுரையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப் படவில்லை, தொடர்ந்து ஒரு வார காலம் கூர்ந்து கவனித்ததன் விளைவே இந்த முடிவாகும்.
இனி இன்று வெளியாகி யுள்ள செய்திகளை ஒவ்வொரு நாளிதழ் வாரியாகப் பார்க்கலாம்:


தினமலர்:


விஜயகாந் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் "குடும்ப நல நிதி", தேர்தல் அறிக்கையில் விஜயகாந் "தாராளம்", என்பது லீட் ஸ்டோரியின் துணைத் தலைப்பாக உள்ளது.
தயாநிதி மாறன் மீது வைகோ அடுத்த புகார் என்ற தலைப்புடன், முதல் பக்க்த்தில் செய்தி ஒன்று தினமலரில் இடம் பெற்றுள்ளது. வைகோவின் அந்தப் பேச்சில் தினமலர் பற்றியும், தினகரன் பற்றியும், தினத்தந்தி பற்றியும் குறிப்பிடப் பட்டிருப்பதால், அந்தச் செய்தியை முழுமையாக இங்கே அப்படியே தருகிறோம்:


மத்திய அமைச்சர் தயாநிதி வகிக்கும் துறையின் அதிகாரத்தின் கீழ்வரும் "செபி'யில்,நெட்ஒர்க் கேபிள் சொல்யூசன் என்ற புதிய கம்பெனி அவரது அண்ணன் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கம்பெனியில் 91 சதவீத பங்குகள் அவருக்கும் 9 சதவீதம் அவரது
மனைவிக்கும் கணக்கு காட்டப்பட்டுள்ளது என கம்பம் பொதுக் கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க., 13 ஆண்டு கடும் சோதனைகளுக்கு பிறகு இந்த தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க., அணியில் எங்களை நசுக்கப் பார்த்தார்கள். நம்ப வைத்து கழுத்தறுத்து விடுவார்கள் என்று தொண்டர்கள் எச்சரித்தார்கள். நான் கூட அங்கேயே இருந்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் கன்னியாகுமரி மாவட்டசெயலாளர் ரத்தினராசை, கருணாநிதி தொலைபேசியில் அழைத்து, உன்னை அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் நிறுத்தலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே அந்த தகவல் எனக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இதுமாதிரி வேலையில் கருணாநிதி இறங்கியிருப்பதாக தெரிந்தவுடன் தான் கூட்டணியை விட்டு விலக நேரிட்டது.
மகாபாரத யுத்தத்தில் அந்த 18 நாள் யுத்தம் முக்கியமானது. கண்ணன் தூது பலனளிக்காமல் போனதும், நீ யுத்தத்திற்கு தாம்பூலம் கொடுத்து விட்டாய் என்று கூறிவிட்டு வருவான். அதே போல் நான் உங்களை சும்மா விட மாட்டோம் 42 நாட்கள் நான் நடந்த நடைபயணத்தை கேலி செய்து முரசொலியில் கடிதம் எழுதினீர்கள். என்ன காரணம்? திருவாரூர் பகுதியில் மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. நேரில் கேட்டதற்கு கோபத்தில்
எழுதி விட்டேன் என்றீர்கள். இன்று, கலர் டி.வி கொடுப்பதாõக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளீர்கள். அதற்கு 15 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று முதல்வர் கூறுகிறார்.
கிலோ அரிசி ரூ. 2 க்கு கொடுக்கப்படும் என்கிறீர்கள். ஒரு கோடியே 50 லட்சம் ரேஷன் கார்டுகள் தான் உள்ளது என்று தவறான தகவல்களை சொல்கிறீர்கள். நீங்கள் கொடுத்தது ஒரு கோடியே 50 லட்சம் கார்டுகள். தற்போது உள்ளது ஒரு கோடியே 88 லட்சம் கார்டுகள். சன் "டிவி'யின் இன்றைய சொத்து மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய். அதில் 10 சதவீத பங்குகளை விற்கப்பட்டன. அதாவது 800 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டன.
கலாநிதிக்கு ரூ. 5 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. கருணாநிதி பங்கு ரூ. 100 கோடி என்றும் அதில் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு ரூ.5 கோடியை மட்டும் பாங்கில் போட்டுள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். மொத்தம் 8 ஆயிரம் கோடியில் உங்கள் பங்கு 100 கோடி தானா? உங்களுக்கே உங்கள் பேரன் பட்டை நாமம் போட்டு விட்டாரா? அல்லது நீங்கள் இருவரும் சேர்ந்து வருவமான வரித்துறைக்கு பட்டை நாமம் போடுகிறீர்களா? மத்திய அமைச்சர், தன்னுடைய இலாகா சம்பந்தப்பட்ட தொழில் எதிலும் ஈடுபடக் கூடாது
என்பது மரபு. ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி, அண்ணன் கலாநிதிக்கு "செபி'யில் நெட்ஒர்க் சொல்யூசன் என்ற கம்பெனியை பதிவு செய்துள்ளார். இதில் கலாநிதிக்கு 91சதவீத பங்குகள்.அவருடைய மனைவி பெயரில் 9 சதவீத பங்குகள் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. தினகரன் பத்திரிகையை ரூ. 300 கோடிக்கு வாங்கி, தற்போது ஒரு ரூபாய்க்கு விற்பனை
செய்கிறார்கள். எதற்கு? தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவா?
இதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு வைகோ பேசினார்.
நக்கீரன் மீதான தடை நீக்கம் என்ற செய்தி தினமலரில் 2ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ஜெயலைதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பற்றி கட்டுரைகள் வெளியிட நக்கீரன் இதழுக்கு விதிக்கப் பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நேற்று நீக்கியது, என்பதே அந்தச் செய்தியின் முகப்புரையாகும்.
திருமாவளவன் சிதம்பரத்தில் பேசிய பேச்சு, தினமலரின் 2ஆம் பக்கத்தில் 2 பத்திச் செய்தியாக இடம் பெற்றுள்ளது.

"நான் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானால், சினிமாவில் நடிக்க மாட்டேன்:விஜயகாந்", என்ற தலைப்பிலான செய்தி தினமலரில் 3ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

"கருணாநிதியின் கவர்ச்சி அறிவிப்புக்கு இது உதாரணம், 30 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பகற்கனவு தான்", என்று ஒரு செய்தி தினமலரில் 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. 1.1.1976 முரசொலி செய்தியை மேற்கோள் காட்டி இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. சென்னை ராமேசுவரம் வரை பயணம் செய்ய பயணிகள் கப்பல் வாங்கப்படும் - சுற்றுலா வர்த்தகப்பொருட்காட்சியை தொடங்கி வைத்து கலைஞர் உரை என்ற செய்தியை மேற்கோள் காட்டி, கீழ்க்கண்ட விமர்சனத்தையும், தினமலரின் சிறப்பு நிருபர் முன்வைத்திருக்கிறார்:


"திமுக தேர்தல் அறிக்கை மொத்தம் 84 பக்கங்கள் கொண்டது என்றால், அதில் காணப்படும் கிலோ ரூ 2 அரிசித் திட்டம், இலவச டிவி திட்டம் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதப் பட்ட விமர்சனங்களைத் திரட்டி வெளியிட்டால் அது 84 பக்கத்தை நிச்சயம் விஞ்சி
விடும். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதும், "கவர்ச்சி" அறிவிப்பை வெளியிடுவார் என்பதற்கு "கப்பல் விடும் அறிவிப்பு", ஓர் உதாரணமாகும்".


சமாஜ்வாடி கட்சி தலைமையில் ஒன்பது கட்சி கூட்டணி
சென்னை: "சமூகநீதி முன்னணி' என்ற பெயரில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைமையில் புதிதாக ஒன்பது கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
“சமாஜ்வாடி கட்சி தலைமையில் ஒன்பது கட்சி கூட்டணி” என்ற செய்தி தினமலரில் 5 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் முகப்புரை வருமாறு:

சென்னை: "சமூகநீதி முன்னணி' என்ற பெயரில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைமையில் புதிதாக ஒன்பது கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு "ஞாபக மறதி' அதிகம் : நினைவூட்டுகிறார் குண்டு கல்யாணம் என்ற தலைப்புடன் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க., நடிகர் குண்டு கல்யாணம் அளித்த சிறப்புப் பேட்டி தினமலரில் இடம் பெற்றுள்ளது.

பசுபதி பாண்டியன் மனைவி சுட்டுக் கொலை, தூத்துக் குடி அருகே பட்டப்பகலில் பயங்கரம், தாகுதலில் தப்பியவர்கள் போலீசில் தஞ்சம் என்ற செய்தி தினமலரின் நெல்லை பதிப்பின் சப்ளிமென்டின் கடைசிப் பக்கத்தில் இடம் பெற்றுள்லது.


தினகரன்:

வேட்புமனு தாகலுக்கு இன்னும் ஐந்தே நாள், களத்தில் 1024 வேட்பாளர்கள் - பிரசாரம் களை கட்டுகிறது, என்பது இன்றைய தினகரனின் லீட் ஸ்டோரியாகும்.

பசுபதி பாணிட்யனைக் கொல்ல முயற்சி என்ற தலைப்புடன் தினகரனில் 3ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி அருகே நடுரோட்டில் பயங்கரம் என்ற முந்து தலைப்புடன் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி பிரச்னை, ஜெவுக்கு சிதம்பரம் சவால், என்ற செய்தி தினகரனில் 5ஆம் பக்கம் வெளியாகியுள்ளது.

இலவச கலர் டிவியை எதிர்ப்பவர்கள் யார்? என்ற தலைப்புடன், ஒரு மக்கள் கருத்து சேகரிக்கப்பட்டு தினகரனின் 6ஆம் பக்கத்தில் அரைப்பக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏழைகள் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்காகச் செலவழிப்பதை பணக்கார வர்க்கம் ஏன் எதிர்க்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது இக்கட்டுரை.

ரூ 1000, 2000 வெள்ள நிவாரணம், மத்திய அரசு தந்த நிதியை தான் கொடுத்தது என்கிறார் ஜெ. தயாநிதிமாறன் குற்றச்சாட்டு, என்ற செய்தி தினகரனில் 6 ஆம் பக்கம் வெளியாகி உள்ளது.
முதல்வர் பிரசார திட்டம் திடீர் மாற்றம், மதிமுக தொகுதிகள் மீண்டும் புறக்கணிப்பு என்ற செய்தி தினகரனில் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இலவச கலர் டிவி, ரூ 2க்கு அரிசி சாத்தியமாக்கிக் காட்டுவோம், கருணாநிதி மீண்டும் உறுதி என்ற கருணானிதியின் கேள்வி பதில் அறிக்கை, தினகரனில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

அரவாணிகளுக்கு அனைத்து சலுகைகள், தேமுதிக தேர்தல் அறிக்கை என்ற 2 பத்திச் செய்தி, தினகரனில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் உளவுத் துறை கிளப்பும் வதந்தி - ராமதாஸ் குற்றச் சாட்டு, என்ற செய்தி 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தை சுரண்டிய கொள்ளைக் கும்பலுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். பிரசாரம் தொடங்கி ஸ்டாலின் பேச்சு, 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.


ஜெ. வாழ்க்கை வரலாறு தொடர், "நக்கீரன்" வெளியிட கோர்ட் அனுமதி, 14 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி

தமிழகத்தில் 5 முனைப் பேட்டி - மனுத் தாகலுக்கு ஐந்தே நாள், என்ற தலைப்புடன் இன்றைய தினமணியின் லீட் ஸ்டோரி இடம் பெற்றுள்ளது.

ஏழைகளுக்கு 15 கிலோ இலவச அரிசி: தேர்தல் அறிக்கையில் விஜயகாந்த் உறுதி என்ற தலைப்புடன் தினமணியில் இடம் பெற்றுள்ள செய்தி வருமாறு:



தேமுதிக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தாம்
போட்டியிடும் விருதாசலத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். முக்கிய அம்சங்கள்:
மாதந்தோறும் ஏழைகளுக்கு 15 கிலோ இலவச அரிசி
ஏழை கர்ப்பிணிகள் கருவுற்ற காலம் முதல் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகள் வரை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் ஊட்டச்சத்து தொகையாக மாதம் தோறும் ரூ. 500.
ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ. 500 வீதம் குடும்பத் தலைவியின் பெயரில் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கில் குடும்ப நிதி.
ஏழைகளுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
கல்லூரி வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
வளர்ச்சிப் பணிகளுக்கு எல்லா கிராமங்களுக்கும் தலா
ரூ.25 லட்சம் அளவு குறையாமல் வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் இடம் விட்டு இடம் பெயரும் மாநில அளவில் செல்லத்தக்க நடமாடும் ரேஷன் அட்டை
கிராமந்தோறும் பொது கழிப்பிடங்கள் நலிவுற்ற மக்கள் சுயதொழில் தொடங்குவதற்கு எளிதில் கடன் கிடைக்க
தமிழ்நாடு வங்கி தொடங்கப்படும்.
மருத்துவ சிகிச்சைக்கு "உடல் நல அடையாள அட்டை'
பெண் சிசுக் கொலையைத் தடுக்க ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ. 10 ஆயிரம் வங்கியில் வைப்பு நிதி
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500
ஓய்வூதியம்.
5 ஆண்டுகளில் சுயவேலை வாய்ப்பை உருவாக்கி 1 கோடி 80 லட்சம் பேருக்கு வேலை உயர் கல்வியில் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசு ஒழுங்கு முறை வாரியம். தமிழ் ஆங்கிலம் அத்தோடு விருப்பப் படமாக 3-வது மொழி படிக்க ஏற்பாடு சத்துணவுடன் பால் கொடுத்து மழலையர் பள்ளிகள் அமைக்கப்படும்.
நவீன வசதிகளுடன் "புதிய சென்னை' லஞ்ச ஊழலை தடுக்க உயர்நீதிமன்ற தலைமையில் குழு. சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டுவரப்படும். இலவசமாக கீதை - பைபிள் - குர்ரான் வழங்கப்படும்.

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம், வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு: பசுபதி பாண்டியன் மனைவி படுகொலை. பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார் , 4 பேருக்கு அரிவாள் வெட்டு, என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.

நெல்லை தொகுதியில் பெரும்பான்மை வாக்காளர்கள் அதிருப்தி என்ற தலைப்புடன் ஒரு செய்தியை ப்.இசக்கி என்ற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். தினமணியின் 2 ஆம் பக்கத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. இச்செய்திக்கு ஆதாரமாக இவர் மேற்கோள் காட்டுவது வவுசி இளஞர் பேரவையின் சார்பில் திருநெல்வேலி நகர்ப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மட்டுமே.
பாளைக்கு ஒரு நீதி, நெல்லைக்கு ஒரு நீதியா? நெல்லை சட்டமன்ற தொகுதியின் பெரும்பான்மையான பிள்ளைமார் சமுதாயத்தை புறக்கணித்த அதிமுக திமுகவை வீழ்த்துவோம். சென்றமுறை மானம் இழந்தோம், இந்த முறை மரியாதை இழந்தோம், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, இழந்ததை மீட்போம், சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் கட்சி?, வ வு சி இளைஞர் பேரவை, தினுநெல்வேலி டவுண், என்று அந்த போஸ்டரில் உள்ள வாசக்கன்கள் கூறுகின்றன. இந்த போஸ்டரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தினமணியால், எப்படி சுமார் அரைப்பக்க அளவிற்கு ஒரு கட்டுரையைப் பிரசுரிக்க முடிகிறது என்பது வியப்புதான்.

தனது வாதங்களுக்கு ஆதாரமாக, ஒரு கூடுதல் தகவல், பேட்டி, புள்ளிவிவரம் எதையும் தரவில்லை இந்த செய்தியாளர். திருநெல்வேலி தொகுதியின் மொத்த வாக்களர்களில் 20% பேர் பிள்ளைமார் என்று இவராகவே ஒரு தகவலை முன் வைக்கிறார். யார் கொடுத்த புள்ளி விவரம் என்பதை வாசகனுக்குத் தரவேண்டாமா? தினமணியும், தினமலர், தினகரன் அளவிற்கு பொறுப்பற்றும், ஆதாரங்கள், மேற்கோள்கள் இல்லாமலும் செய்தி வெளியிட்டு வருகிறது என்பதற்கு இதைச் சான்றாகக் கருதலாமா?


சிவகங்கை மத்தியக் கூட்டுறவு வங்கி விவகாரம் - ஜெ. புகாருக்கு ப.சிதம்பரம் மறுப்பு, என்ற தலைப்பில் தினமணியின் 4 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு வாபஸ் என்றொரு செய்தி, தினமணியின் 4 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

யானை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி என்ற செய்தி தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சோதனைகளைச் சாதனைகளாக்கிய எனக்கு மீண்டும் வாய்ப்புத் தாருங்கள், மானமதுரையில் ஜெயலலிதா பிரசாரம், என்ற செய்தி தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மதுரை, விருதுனகர் மாவட்டங்களில் ஜெ. இன்று தேர்தல் பிரசாரம் என்ற செய்தி, தினமணியின் 5 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தைரியமிருந்தால் என் மீது வழக்கு போட்லாம்: வைகோ, ஓராயிரம் ரகசியங்களை வெளிப்படுத்துவேன், என்ற செய்தி,
தினமணியின் 7 ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தனியார் டி.வி. சேனல்கள் இலவசமாக கிடைக்கும்: அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு வலியுறுத்துமா? என்ற தலைப்பில் கே.எம். சந்திரசேகரன் எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையும், இன்று வெளியாகியுள்ள ப. இசக்கியின் கட்டுரையும், ஏறத் தாழ ஒரே மாதிரி தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு தனி நபரின் சொந்தக் கருத்து. இதை செய்திக் கட்டுரையைப் போல வெளியிடுவது அறமா? தனது வாதங்களுக்கு உரிய ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல், இப்படி தனது சொந்தப் பார்வையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழுதுதல் பத்திரிகை தர்மமாக்குமா?

கே.எம். சந்திரசேகரன் எழுதிய இக்கட்டுரையை அப்படியே கீழே தருகிறோம்.:



சென்னை, ஏப்.8: தனியார் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பை வீடுகளுக்கு இலவசமாக வழங்க திமுக ஏற்பாடு செய்யுமா என்று தேர்தல் பிரசாரத்தில் கேள்விகள் எழுப்புகின்றனர். இதை மத்திய அரசு செய்ய முடியும். அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு கோரிக்கைகள் வைக்க வேண்டும்.
இப்போது தூர்தர்ஷனின் டி.டி.எச். (வீடுகளுக்கே நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பில் எல்லா சேனல்களுமே இலவசமாகத் தான் கிடைக்கின்றன. அதில் எல்லா தனியார் சேனல்களுக்கும் இடம் தர வேண்டும் என்று
எல்லா அரசியல் கட்சிகளும் வலியுறுத்தினால் பொதுமக்கள் உண்மையான பலனைப் பெறுவார்கள்.
இப்போது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் மூலம் பெற்று வீடுகளில் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். இதற்கு மாதந்தோறும் ஆப்பரேட்டருக்கு பணம் கட்ட வேண்டியிருக்கிறது. ஆப்பரேட்டர்கள் உதவியின்றி தனியார் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க உதவி செய்கிறது டி.டி.எச். எனப்படும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு. வீட்டின் மாடியிலோ, பால்கனியிலோ ஓர் அடி விட்டம் உள்ள சிறிய டிஷ் ஆன்டனாவைப் பொருத்தினால் இந்த ஒளிபரப்பு சிக்னல்களை
செயற்கைக் கோள்களில் இருந்து நேரடியாகப் பெற முடியும். இந்த சிக்னலை செட்-டாப்-பாக்ஸ் மூலம் மாற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகப் பார்க்கலாம்.
இதற்கான டிஷ் ஆன்டனா, செட்-டாப்-பாக்ஸ் ஆகியவை வாங்க சுமார் ரூ.3500 செலவாகும்.
நிறைய பேர் வாங்கும் நிலை வந்தால் இதன் விலை பெருமளவு குறையும். ரூ.1500-க்கு இது கிடைக்கும் என்றால் எல்லோருமே இத் திட்டத்தை நாடுவர்.
டிஷ் ஆன்டனா, செட்-டாப்-பாக்ஸ் ஆகியவற்றுக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும். ஆப்பரேட்டருக்கு
மாதந்தோறும் பணம் கட்டும் பிரச்சினை ஏதும் இல்லாமல் காலம் முழுக்க இலவசமாக தனியார்
டி.வி. சேனல்களைப் பார்க்கலாம்.
இதிலும் கட்டணச் சேனல்களைப் பார்க்க மாதந்தோறும் நாம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதை நிர்வகிக்க சில தனியார் நிறுவனங்கள் டி.டி.எச். ஒளிபரப்பில் ஈடுபட்டுள்ளன.
தூர்தர்ஷன் தொடங்கியுள்ள டி.டி. பிளஸ் என்ற ஒளிபரப்பில் 33 சேனல்கள் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாமே இலவச சேனல்கள். இந்த ஒளிபரப்பைத் தேர்வு செய்தால் மாதந்தோறும் செலவு இனி கிடையாது.
இந்த ஒளிபரப்பில் சில தனியார் சேனல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழில் சன் டி.வி.யும், தூர்தர்ஷனின் பொதிகை சேனலும் இதில் உள்ளன. டி.டி. பிளஸ் பட்டியலில் தனியார் சேனல்களுக்கு இலவசமாகவே இடம் தரப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் இப் பட்டியலில் 50 சேனல்கள் இடம் பெற உள்ளன. எனவே, 10 தனியார் சேனல்கள் இதில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதில் ஜெயா டி.வி., ராஜ் டி.வி. உள்ளிட்ட தமிழ்
சேனல்களும் இடம் பெறுமானால், பெரும்பாலான மக்கள் பயன் பெறுவர்.
தமிழ் சேனல்கள் மட்டும் பார்ப்பவர்கள் டி.டி.எச். திட்டத்துக்கு மாறிவிட்டால், மாதச் செலவு இருக்காது.
கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் தனியார் சேனல்கள் எதுவும் இப்போது டி.டி. பிளஸ் பட்டியலில் இல்லை. எனவே, தமிழில் எவ்வளவு சேனல்களுக்கு இதில் இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை.
தமிழில் உள்ள சேனல்களை, பார்வையாளர் எண்ணிக்கை
அடிப்படையில் தரப்பட்டியல் தயாரித்து, முக்கியமான சேனல்களை மேற்படி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த எல்லா அரசியல் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும். இதில் தேர்தல் கால அரசியல் லாபம் எதையும் பார்க்காமல்
செயல்பட்டால், உண்மையில் தமிழக மக்கள் பயன்பெறுவார்கள்.


சாதித்தேன் என ஒரு திட்டத்தைக் கூட ஜெ சொல்ல முடியாது: ராமதாஸ் ஆர்க்காட்டில் நிருபர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

நக்கீரன் பத்திரிகையில் ஜெ. பற்றி கட்டுரை எழுதத் தடை நீக்கம் என்ற செய்தி தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

சிதம்பரம் பகுதியை சுற்றுலா மையமாக்குவேன் என்று விஜயகாந், சிதம்பரத்தில் பேசிய பேச்சு, தினமணியில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

கருணாநிதி சுற்றுப் பயணத்தில் மாற்றம்: 27 நாள் பிரசாரம், சென்னையில் 10 நாள் என்ற செய்தி தினமணியின் 9 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

நாளை மௌனம் களைகிறார் சரத் குமார், என்ற செய்தி தினமணியின் 10ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தினத்தந்தி:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு கடும் கட்டுப் பாடு - அரசியல் கட்சிகளுக்கு 9 கட்டளைகள் - விதிகளை மீறினால் 2 ஆண்டு வரை ஜெயில் தண்டனை, என்ற செய்தி, இன்றைய தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாகும்.

தூதுக் குடி அருகே சினிமாவை மிஞ்சும் பயங்கரம், பசுபதி பாண்டியன் மனைவி துப்பாக்கியால், சுட்டு கொலை, 4 பேருக்கு அரிவாள் வெட்ட், வெடி குண்டு வீச்சு, பதட்டம். என்ற தலைப்புடன் இச்செய்தி முதல் பக்கத்திலும், தொடர்ச்சி, 8ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

நக்கீரன் பத்திரிகையில் வெளியாகும் ஜெயலலிதா, சசிகலா பற்றிய செய்திகளை அவர்களிடம் முன்னதாக தெரிவிக்க வேண்டும், ஐகோர்ட்டு உத்தரவு என்ற செய்தி தினத்தந்தியின் 3ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், விஜயகாந் கட்சி தேர்தல் அறிக்கை, என்ற செய்தி தினத்தந்தியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சற்று விரிவாக வெளியிடப் பட்டுள்ள இந்தச் செய்தியை முழுமையாக் வாசிக்க தினத் தந்தியின் http://www.dailythanthi.com/article.asp?NewsID=250445&disdate=4/8/2006&advt=1
என்ற முகவரிக்குச் செல்லலாம்.

மதிமுக எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்து பதவி பெற்ற திமுக மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும், ஆண்டிபட்டியில் வைகோ பேச்சு என்ற செய்தி தினத்தந்தியில் 9ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

கருணாநிதி மீது மேலும் பல குற்றச் சாட்டுகள்: ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன்: வழக்கு போட தயாரா? வைகோ ஆவேச பேச்சு என்ற செய்தி தினத்தந்தியின் 18 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது.

வைகோவின் பேச்சுக்களை தினத்தந்தி எவ்வாறு விரிவாக வெளியிட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள, இந்தப் பேச்சு தினத்தந்தியில் பிரசுரிக்கப் பட்ட படி அப்படியே தரப் படுகிறது.

கருணாநிதி மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்
ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன்; வழக்கு போட தயாரா? வைகோ ஆவேச பேச்சு


கம்பம், ஏப். 8-
``கருணாநிதி மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை
வைத்துள்ளேன். ஓராயிரம் ரகசியங்களை வெளியிடுவேன். என் மீது வழக்கு போடுங்கள்''
என்று வைகோ ஆவேசமாக கூறினார்.

பிரசாரம்
ஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு அவர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் கம்பம் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்து வைகோ பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- அலை மோதுகிறது
தமிழக அரசியல் நிலை இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிகள் பலமாக இருப்பதாக ஒரு சில பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் ஜனநாயக மக்கள் கூட்டணியை தான் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என தமிழக முதல்-அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 31-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் பிரசாரத்தை தொடங்கினார். அவர் செல்லும் இடங்களில்
மக்கள் அமோக கூட்டமாக அலை, அலையாக திரளுகின்றனர். எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்
என்று மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நான் 8-வது நாளாக கூடலூரில் பிரசாரத்தை
தொடங்கி உள்ளேன். ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர தீர்மானித்து
விட்டார்கள்.

டிஸ்மிஸ்

கடந்த 1980-ஆம் ஆண்டு எம்.பி. தேர்தல் நடைபெற்றது.
அன்று இ.காங்கிரசும், தி.மு.க. வும் கூட்டணி அமைத்தது. 39 தொகுதிகளிலும் அந்த கூட்டணியினர் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் அப்போது முதல்- அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டவுடன் கருணாநிதி, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை வைத்தார். கருணாநிதியின் தொல்லையை தாங்க முடியாமல் பிரதமர் இந்திராகாந்தி வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். மக்களை சந்தித்து நியாயம் கேட்டார். மக்களும் சரியான தீர்ப்பினை
வழங்கினர். மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.

அரிசி விலை

அதே போன்று இப்போதும் எங்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். மத்திய அரசு அரிசி விலையை உயர்த்தக் கூடாது என்று தமிழக
முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் மத்திய அரசு உயர்த்தும் பட்சத்தில் அந்த வரி உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் என்றும் அந்த அரிசி விலை உயர்வு சுமையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,350 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தான் ரேஷன் அரிசி விலையை கிலோ ரூ.3.50-க்கு முதல்-அமைச்சர் வழங்கி
வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கைகள் குறிப்பாக தமிழக அமைச்சர்கள் 13 பேர் இருக்கும் போதே இவ்வாறு இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களே நீங்கள் எவ்வாறு ரேஷன் அரிசி கிலோ ரூ.2-க்கு கொடுக்க முடியும். தி.மு.க. ஆட்சியில் ஒரு
கோடியே 56 லட்சம் குடும்ப அட்டைகள் இருந்தன. 30 லட்சம் பேர் குடும்ப அட்டை இன்றி தவித்தனர். தற்போது முதல்-அமைச்சர் ஒரு கோடியே 88 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கி உள்ளார். இவ்வாறு இருக்கையில் நீங்கள் எப்படி அரிசி விலையை குறைத்து
போடுவீர்கள்? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் மீண்டும் ஏமாற தயாராக இல்லை.

ரகசியத்தை வெளியிடுவேன்

தி.மு.க.வில் துரும்பை கூட தூக்கி போடாத பேரனை தி.மு.க. தலைவர் கருணாநிதி எம்.பி. ஆக்கினார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஆக்கினார். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களே உங்கள் மீது இன்னும் பல
குற்றச்சாட்டுகள் வைத்துள்ளேன். ஓராயிரம் ரகசியத்தை வெளியிடுவேன். என் மீது வழக்கு தொடருங்கள். (இவ்வாறு 3 முறை ஆவேசமாக கூறினார். பொதுமக்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.)

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர்
தேக்க உச்சநீதி மன்றம் 142 அடி வரை தண்ணீரை தேக்க அருமையான தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அடுத்து உடனே கேரள சட்டசபையில் தனை எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றுகிறது. இதனை தட்டி கேட்க இங்குள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தெம்பு இல்லையா? குறிப்பாக தமிழக இ.காங்கிரஸ் மற்றும் கம்ïனிஸ்டு கட்சிகளும், தி.மு.க. தலைவரும் இந்த விஷயத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளை தட்டி கேட்காதது ஏன்?
தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்கின்ற துரோகத்தை தட்டி கேட்க அ.தி.மு.க.-ம.தி.மு.க. ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளியுங்கள். இந்த கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு வைகோ பேசினார்.
இந்த பிரசார தொடக்க கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தினகரன் எம்.பி., மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், கம்பம் நகர செயலாளர் நாகராஜ், ம.தி.மு.க. வக்கீல் நெப்போலியன், கூடலூர் பொன்முருகேசன், ஒன்றிய செயலாளர் அம்சராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்திரிகைகளும் அரசியல்கட்சிகளும் கூட்டணி

Day 7 April 07 2006

அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரும் தமிழகப் பத்திரிகைகள்

கடந்த 7 நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை தமிழ் நாளிதழ்களில் பதிவு செய்யப் பட்ட விதத்தை ஆய்வு செய்ததில் ஒவ்வொரு பத்திரிகையும் ஏ தே னும் ஒரு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே செயல்பட்டு செய்திகளைப் பதிவு செய்து வருவது தெரிய வந்துள்ளது.
தினகரன் திமுக சார்பாகவும், தினத் தந்தி திமுக விற்கு எதிரான நிலைப்பாடும் அதே வேளை அதிமுக சார்பாகவும்; தினமலரும் தினமணியும் தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு செய்திகளைப் பதிவு செய்து வருவதைக் கண்டு கொள்ள முடிந்தது. அரசியல் கட்சிகளுடன் அறிவிக்கப் படாத, எழுதப்படாத கூட்டணியை உருவாக்கிக் கொண்டு இந்தப் பத்திரிகைகள் மக்களுக்கு எதிராகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நிதர்சனமாகக் கண்டுணர்ந்திருக்கிறோம், informed decision என்ற முடிவை எடுக்க இவை ஒரு போதும் மக்களுக்கு உதவவில்லை என்ற குறிப்புடன், இன்றைய ஆய்வைப் பார்ப்போம்.
இன்று (ஏப்ரல் 7 2006) குறைந்தது மூன்று செய்திகளை, ஆய்வுக்குட்படும் 4 தமிழ் நாளிதழ்களுமே வெளியிட்டுள்ளன:
அவை : பா ஜ க வின் தேர்தல் அறிக்கை, ஆண்டிப்பட்டியில் கார்த்திக் போட்டியிட, அகில இந்திய பார்வார்ட் பிளாக் யோசனை, 10 தொகுதிகளுக்கு இ கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, என்பவையே அந்த செய்திகள்.
2 ரூபாய்க்கு ரேஷன் அரிசி என்பது மக்கள் காதில் பூ சுற்றும் முயற்சி என்று ஜெயலலிதா பேசிய பேச்சு, தினத் தந்தியில் 3 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியை, வேறு எந்த தமிழ் நாளிதழும் வெளியிடவில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குறித்து கருணாநிதி அளித்துள்ள புகாருக்கு, நரேஷ் குப்தா அளித்துள்ள பதிலை, தினகரன் தவிர பிற மூன்று நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன (தந்தி ப.7, மலர் ப 5, தினமணி ப 5).
கேபிளையாவது ஒழுங்காக் கொடுக்க முடியுமா (திருச்சி கூட்டத்தில் வைகோ பேச்சு) என்று வைகோ எழுப்பியுள்ள கேள்வி தினமலரில் மட்டும் (ப.4) வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் தே முதிகவின் இறுதிப் பட்டியல் குறித்த செய்தியும், பட்டியலும் தினகரன் தவிர்த்த அனைத்துப் பத்திரிகைகளிலும் (தினத் தந்தி ப. 10, மலர் ப.16, தினமணி ப. 9) வெளியாகியுள்ளது.
மதுரையில் ஜெயலலிதாவும், திருமாவளவனும், வைகோவும் இணைந்து ஒரே மேடையில் பேசுவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. இத் திட்டம் பின்னர் கைவிடப் பட்டது என்ற செய்தி, தினகரனிலும் (ப.6), தினமலரிலும் (ப.17) வெ ளி யாகியுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்த்தப் பட்டால், கேபிள் ஒழுங்கு முறைச்சட்டம் கொண்டு வரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செய்தி தினகரனில் மட்டும் வெளியிடப் படவில்லை (தந்தி, ப.1, மலர் ப.20, தினமணி ப.9).
பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதி மன்றம் தடை, ஜெயலலிதா புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் என்ற செய்தி, தினகரனில் முதல் பக்கத்தில், லீட் ஸ்டோரியாகவும், தினமணியிலும் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாகவும் வெளிவந்துள்ளது. தினத் தந்தியும், தினமணியும் இச்செய்தியை வெளியிடவில்லை.
"தேர்தல் பிரசார நேரத்தைக் குறைத்து தேர்தல் ஆணையம் பிரப்பித்த உட்தரவுக்கு உள் நோக்கம் கற்பித்து ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே, தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை பிறப்பித்க்ததற்கான கரணங்கள், சூழ்நிலைகளை விளக்கி உடனடியாக பதில் அளிக்க வேண்டும், என்று கோரி தலைமைத் தேர்தல் அணையருக்கு த்முக தலவர் கருணாநிதி எழுதிய கடிதம் பற்றிய செய்தி, தினமணி தவிர பிற நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
இலவச டி வி கட்டாயம் தருவோம், என்று கருணாநிதி சென்னை புரசைவாக்கக் கூட்டத்தில் பேசிய செய்தி மீண்டும் வேறு வடிவில், தினகரனில் 16 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தவிர, புதன் கிழமை நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சாரத் தொடக்க விழாவில் பேசிய தலைவர்களின் உரையையும் தினகரன் தனித் தனியாகவும் விரிவாகவும் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பேச்சும், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாகிருல்லாவின் பேச்சும் சுருக்கமாக தனித் தனியாக வெளியிடப் பட்டுள்ளன (ப. 7).
படுகொலை செய்யப் பட்ட அதிமுக தொண்டருக்கு ரூ ஒரு லட்சம் ஜெயலலிதா அறிவுப்பு என்ற செய்தி, தினத்தந்தியில் மட்டும் (ப.8) இடம் பெற்றுள்ளது.
மருத்துவ சவர தொழிளாலர் ஒருங்கிணைப்பாளர்களின் அறிக்கை, தினத்தந்தியில் மட்டும் (ப. 12) இடம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் மத்த்டியில், வேட்பாளர் தேர்வு குறித்த அதிருப்தி நிலவுவதாக, தினமலர் லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் 16 இடங்களில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக ஒரு செய்தி தினமலரில் மட்டும் (ப.15) வெளியாகியுள்ளது.
தென்காசி தொகுதி விடுதலைச் சிறுத்தைகளின் செயல்வீரர்களின் கூட்டம் பற்றிய செய்தி, தினமலரில் 12 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இச்செய்தி வேறு எந்தப் பத்திரிகையிலும் இடம் பெறவில்லை.
கழுகுமலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்ததாக, தினகரனில் 2ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ராமதாஸின் 16 நாள் பிரச்சாரத் திட்டம், தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது (ப. 7).
தினத்தந்திக்கும், தினமலருக்கும் கொடுக்கப்பட்ட விளம்பரத் தொகை எவ்வளவு? 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு என்ற செய்தி, தினகரனில் மட்டும் (ப,14) வெளியாகியுள்ளது.
விஜயகாந் தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7 அன்று ) வெளியாக்ப் போவதாக தினமணியில் மட்டும் (ப.1) செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா, வைகோ ஆகிய இருவரின் பிரச்சார பாணியை ஒப்பிட்டு, அலசி ஆராய்து, தினமணி ஒரு செய்திக் கட்டுரையைல் வெளியிட்டுள்ளது (ப.10) .
இலவச கலர் டிவியைக் கட்டுப் படுத்த முடியாது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சொன்னதாக தினமணியில் மட்டும் (ப.7), செய்தி வெளியாகி உள்ளது.
முதல் வார அலசலின் இறுதியில் தமிழ்ப் பத்திரிகைகள் குறித்த ஏமாற்றமும், வெறுப்புமே மிஞ்சுகிறது என்ற குறிப்புடன் இன்றைய ஆய்வை நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளைய ஆய்வுடன், சந்திப்போம்,
கலா,
ஊடக விமர்சனக் குழுவிற்காக.

Thursday, April 06, 2006

சிறுபான்மையினருக்கும் இடம் மறுப்பு

தமிழ் ஊடகங்களில் சிறுபான்மையினரின் குரலுக்கும் இடமில்லையே ஏன்?


காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல், திமுக் கூட்டணியின் பிரச்சாரம் தொடக்கம், காட்டுமன்னார்குடியில் திருமாவளவன், தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தல், என நேற்றைய தேர்தல் களம் களை கட்டியிருந்தது. தலித்களின் குரல் மட்டுமல்ல, முஸ்லிம் சிறுபான்மையினரின் குரலுக்கும் தமிழக மெயின்ஸ்ட்ரீம் மீடியா, உரிய இடம் தர மறுத்து இருட்டடிப்புச் செய்து கொண்டிருக்கிறது, இதில் தினமணியும் விதிவிலக்கல்ல என்பதை இன்று கண்டறிந்தோம்.இந்த முன்னுரையுடன் இன்றைய ஆய்வைத் தொடங்குவோம்.

ஜெயலலிதா, தஞ்சாவூரில் மேற்கொண்ட பிரச்சாரமும், அவரது பேட்டியும் இன்றைய நாளிதழ்களின் இடங்களை ஆக்கிரமித்துள்ளன. "தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர வாக்களியுங்கள்: தஞ்சையில் ஜெயலலிதா பேச்சு, என்பது தினமலரின் தலைப்பு. (ப.1).
"தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட கவர்ச்சித் திட்டங்களை திமுக நிறைவேற்ற முடியாது: ஜெ பேட்டி", என்பது தினத்தந்தியின் தலைப்பு (ப. 1). கிராமங்களில் பிரச்சார நேரத்தைக் குறைத்ததற்கு தி மு கவே காரணம்: ஜெ குற்றச் சாட்டு", என்பது தினமணியின் தலைப்பு (ப.7). "என் சாதனைகளை சில நிமிடத்தில் சொல்வது எளிதான வேலையல்ல: தஞ்சையில் ஜெயலலிதா பிரச்சாரம்", என்பது தினகரன் தந்துள்ள தலைப்பு (ப்.6). ஆக, 4 நாளிதழ்களுமே ஜெயலலிதாவின் பிரசாரத்திற்கும், பேட்டிக்கும் முக்கியத்துவம் தந்து செய்தியை வெளியிட்டு விட்டன. தினத் தந்தி, தொடர்ந்து ஜெயலலிதாவின் செய்தியை லீட் ஸ்டோரியாக்கி வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல், 4 நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக வெளிவந்திருக்கிறது. திமுக அமைச்சர்கள், பிற மாநிலங்களில் தேர்தல் நிதி வசூலிப்பதாக வைகோ கூறிய குற்றச்சாட்டை நேற்று வெளியிட்ட பத்திரிகைகள், இன்று அந்தக் குற்றச் சாட்டிற்குப் பதில் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜா வெளியிட, அதை தினத் தந்தி மட்டும் 3ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. பிற பத்திரிகைகள் அதை வெளியிடவில்லை.

தேர்தல் பிரச்சாரத்திற்கு சோனியாகாந்தி வரவிருப்பது உள்ளிட்ட பல தகவல்களை வெளியிட்ட கருணாநிதியின் சென்னை பேட்டி, தந்தியில் 5ஆம் பக்கத்திலும், தினமணியில் 9ஆம் பக்கத்திலும், தினகரனில் 7ஆம் பக்கத்திலும், தினமலரில் 5 ஆம் பக்கத்திலும் வெளியாகியிருக்கின்றன.

இரண்டு ரூபாய்க்கு அரிசி எப்படி வழங்கப்படும் என்பது பற்றியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்க என்ன திட்டமுள்ளது என்பது பற்றியும், கருணனிதி விளக்கிப் பேசிய பிரச்சார உரை, தந்தி (ப.8), தினமணி (ப4), தினகரன் (ப.5), தினமலர் (ப6), என அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகி உள்ளது. தினகரன், திமுக பிரச்சாரம் தொடங்கப் பட்ட மேடையில் தலைவர்கள் அமர்ந்திருக்கும் படத்தை 8 பத்திகளில் பெரிதாக வெளியிட்டுள்ளது.
நடிகரும் முன்னாள் இயக்குநருமான பாக்கிய ராஜ், திமுகவில் சேர்ந்த செய்தி, 4 நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.[தந்தி (ப.10 , தினமணி ப.9, தினகரன் ப.1, தினமலர், ப.16].
ராமதாசின் நேற்றைய சென்னை பேட்டி, 4 இதழ்களிலும் இடம் பெற்றுள்ளது. "திமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றக் கூடியதுதான்", டாக்டர் ராமதாஸ் பேட்டி (தந்தி ப.10), "இன்னும் 10 நாள்களில் ஜெக்கு எதிரான அலை", ராம்தாஸ் ஆரூடம் (தினமணி ப.6), தினமலரிலும் (ப.6), தினமலரிலும் (ப.7), இச்செய்தி சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள், தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த செய்தி, தினத்தந்தியில் 13ஆம் பக்கத்திலும், தினமலரில் 14ஆம் பக்கத்திலும் வெளிவந்துள்ளன. தினகரனும், தினமணியும், இந்தச் செய்தியை வெளியிட வில்லை.

தமிழ் நாட்டில் மாயாவதி 5 நாட்கள் பிரச்சாரம், பகுஜன் சமாஜ்வாடிக் கட்சியின் வேட்பாளர்கள் 55 பேர் அறிவிப்பு என்ற செய்தி தினத் தந்தியில் 13 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. எனினும், வேட்பாளர்களின் முழு பட்டியலும் இடம் பெறவில்லை.

திருமாவளவன் முதல் கட்டப் பிரச்சாரம் என்ற செய்தி தினமணியில் 4ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவர் என்ன பேசினார் என்ற தகவல் எதுவும் இல்லை. திருமாவளவன் பங்கேற்றார் என்று மட்டுமே செய்தியில் காணப் படுகிறது. வைகோ, தனது தந்தையின் நினைவு நாளான, ஏப்ரல் 5 அன்று பகலில் மவுன விரதம் இருந்ததாக நேற்றைய நாளிதழ் ஒன்றில் செய்தி இடம் பெற்றிருந்தது. அது போல திருமாவளவன் ஏதாவது விரதத்தில் இருக்கிறாரா, என்று தெரியவில்லை. திருமா தனது கட்சி வேட்பாளர்களைக் காட்டுமன்னார்கோவிலில் அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பேச்சு 4 இதழ்களில் எதிலும் இடம் பெறவில்லை. அவர் என்ன பேசினார் என்பதை, இந்த நவீன வசதிகள் கொண்ட யுகத்திலும் இவ்வளவு எளிதாக இருட்டடிப்பு செய்து விட முடிகிறதே? தலித் என்பதால் தான் இந்த நிலையா?

தினமணியில் வெளியாகியுள்ள திருமாவளவன் குறித்த செய்தி இதோ அப்படியே தரப்படுகிறது.

திருமாவளவன் முதல்கட்ட பிரசாரம்


சென்னை, ஏப்.6: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.

சுற்றுப் பயண விவரம்:

ஏப்.6 -காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி மற்றும் சிதம்பரம் நகர்.

ஏப்.7 -அண்ணாமலை நகர், சிதம்பரம் நகர், வல்லம்படுகை.

ஏப்.8 -செம்பானூர், நல்லாடை, நல்லாத்தூர், நெடுங்காடு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

ஏப்.9 -விருத்தாசலம் நகர், கரிவேப்பிலங்குறிச்சி, ராசேந்திரப்பட்டினம், முருகன்குடி, பெண்ணாடம்.

ஏப்.10 -ஆவினங்குடி, திட்டக்குடி, வேப்பூர், நல்லூர், உளுந்தூர்பேட்டை.

ஏப்.11 -உளுந்தூர்பேட்டை நகர், எலவுநாத்தூர்கோட்டை, தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை .

ஏப்.12 -விழுப்புரம், கிடார்.

ஏப்.13 -செங்கம், சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு. அரூரில் பொதுக் கூட்டம்.

ஏப்.14 -ஊத்தங்கரை, காரப்பட்டு, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், அணைக்கட்டு.

ஏப்.15 -சத்துவாச்சாரி, விஷாரம், ஆர்க்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், தக்கோலம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு. ஸ்ரீபெரும்புதூரில் பொதுக் கூட்டம்.


தமிழக நதிகளை இணைப்பேன், நடிகர் விஜயகாந்த் பிரசாரம் என்ற தலைப்பில் தினமணி 6ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் நடிகராகத் தான் பிரச்சாரம் செய்கிறாரா? அவருக்கு என்று ஒரு அரசிய்ல் கட்சி தொடங்கி பிரச்சாரமும் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கும் போது நடிகர் என்ற அடைமொழி அவசியமா? தினமணி தவிர வேறு எந்த நாளிதழும் அவரது பூந்தமல்லி பேச்சை வெளியிடவில்லை.

அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் என்று ஒரு கருத்துக்கணிப்புக் கூறுவதாக தினமணி 7ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியும் வேறு எந்த நாளிதழிலும் இடம் பெறவில்லை.

ஸ்டாலின் ஒரு மாத பிரசாரம் என்ற செய்தி தினமணியிலும் (ப்.7), தினகரனிலும் (ப7) இடம் பெற்றுள்ளது.

வைகோவை விமர்சித்து தயாநிதி மாறன், பேசிய பேச்சு, தினகரனிலும் (முதல் பக்கம்), தினமலரிலும் (3ஆம் பக்கம்) வெளியாகியுள்ளது. பிற 2 பத்திரிகைகளும் இச்செய்தியை வெளியிடவில்லை.

வைகோவின் ஒரு பேச்சு, தினமலரில் மட்டும், மற்றொரு பேச்சு தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. "அழியப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். அமிர்தமதி காவியத்தைக் கூறி கருணாநிதிக்கு வைகோ பதில்", என்ற தலைப்பில் வைகோவின் உடுமலைப்பேட்டை பேச்சு, தினமலரில் 6ஆம் பக்கம் வெளியாகி உள்ளது. "தமிழகத்துக்கு பிரதமர் வருவதைத் தடுத்தார் கருணாநிதி: வைகோ குற்றச்சாட்டு", என்ற தலைப்பில் கறுரில் செவ்வாய்க்கிழமை (4.4.2006) வைகோ பேசிய பேச்சும் இடம் பெற்றுள்ளது. கரூரில் வைகோ அளித்த பேட்டி ஒன்று தினத் தந்தியில் வெளிவந்துள்ளது: "பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமைக்கும்", என்ற தலைப்பில் தினத்தந்தியின் 4 ஆவது பக்கத்தில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.

இன்றைய அறம் தவறிய செயல்களாகக் கொள்ளத் தக்கவை:

1. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சார்த் தொடக்க விழா, நேற்று சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய தலைவர்களின் உரையை தினமலர் விரிவாக வெளியிட்டுள்ளது. தினத்தந்தியும் விரிவாகவே வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஆகிய இருவரின் பேச்சுக்களை 4 நாளித்ழ்களுமே வெளியிடவில்லை. இவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள் என்று செய்தியை முடித்துக் கொண்டன. சிறுபான்மை இனத்தவர்களான இந்த 2 தலைவர்களின் பேச்சுக்களை மட்டும் இருட்டடிப்பு செய்வது அறமா?

2. திருமாவளவன் நேற்று காட்டு மன்னார்கோவிலில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பேச்சு எந்த நாளிதழிலும் இடம் பெறவில்லையெ ஏன்?

3. "தயாநிதி மாறன் 'அநாகரீக ஆவேசம்', திமுக கூட்டணித் தலைவர்கள் எரிச்சல்", என்ற தலைப்பில் தினமலர் திருநெல்வேலி சப்ளிமென்டின் 11ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், எந்தத் தலைவரையும் மேற்கோள் காட்டாமல், "அதிமுக, மதிமுக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்", என்று மட்டும் சொல்லி விட்டு ஒரு அவதூறைப் போல செய்தி வெளியிடுவது அறமா?

4. எம்ஜிஆர் பெயரைச் சொல்லி பிரச்சாரம், ஜெ பாணியில் திடீர் மாற்றம், என்று எந்த ஆதாரமும் இல்லாமல், தினகரன் 7ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார் என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. பத்திரிகை நிறுவனங்கள் தங்களின் அரசியலுக்காகச் செய்தி வெளியிடும் போது, இப்படி எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டாமல் எழுதுவது அறமா?

இந்தக் கேள்விகளுடன் இன்று விடை பெறுகிறோம். மீண்டும் நாளைய விமர்சனத்துடன் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழு

தலித்துகள் மேலும் புறக்கணிப்பு

தலித்துகளுக்கு மீண்டும் மீண்டும் இடம் மறுக்கும் தமிழ் ஊடகங்கள்

ஏப்ரல் 5 அன்று வெளியான 4 நாளிதழ்களிலும் இடம் பெற்ற 10 செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
1. ஜயலலிதா திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்தச் செய்தி 4 நாளிதழ்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன. என்றாலும், வெளியிடப் படும் செய்தியின் அளவிலும், முக்கியத்துவத்திலும் நிறைய வேறுபாடுகளைக் காண முடிந்தது. இலவச கலர் டீ வி கொடுக்க ரூ 15 ஆயிரம் கோடி எங்கே கிடைக்கும் என்ற ஜெயலலிதாவின் கேள்வி தினமனியின் லீட் ஸ்டோரியாகி இருக்கிறது. திருவாரூர் வயலில் வேலை செய்த பெண்களிடம் ஜெயலலிதா உரையாடும் காட்சி, தினத் தந்தியில் முதல் பக்கத்திலும், தினமலரில் கடைசிப் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.
2. பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஏப்ரல் 4 அன்று வெளியிடப் பட்டிருக்கிறது. 139 பேர் கொண்ட முழுப் பட்டியலையும், தினமலர், தினத் தந்தி, தினமணி ஆகிய 3 நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன. தினகரன், செய்தியை மட்டும் வெளியிட்டு விட்டு, பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது.

3. நேற்று (ஏப்ரல் 4, 2006) வெளியான மற்றொரு வேட்பாளர் பட்டியல், அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் பட்டியலாகும். அக்கட்சியின் தமிழகத் தலைவர் நடிகர் கார்த்திக் இந்தப் பட்டியலை வெளியிட்டார். 19 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 4 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. பட்டியலை வெளியிட்ட கார்த்திக்கின் படம் தினமலரில் வண்ணத்தில் பெரிதாகவும், தினத் தந்தியில் வண்ணத்தில் ஓரளவு பெரிதாகவும் (2 காலம் அகலம், 15 செ மீ உயரம்) வெளியிடப் பட்டுள்ளது.
4. தமிழக அரசியலில் நேற்று (ஏப்ரல் 4) மிக முக்கியமான செய்தியாக 4 நாளிதழ்களும் கருதியது, ஜெயலலிதாவும், வைகோவும், திருமாவளவனும், ஒரே மேடையில் மதுரையில் ஏப்ரல் 8 அன்று, பிரச்சாரம் செய்யப்போகும் தகவல் அறிவிக்கப் பட்டது தான். தினத் தந்தி இந்தத் தகவலை லீட் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தது.
5. திருமாவளவன், இன்று ஏப்ரல் 5 அன்று காட்டுமன்னார்கோவிலில் தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தச் செய்தி, தினகரனில் மிகச் சிறிய அளவில், ஒரு பத்திச் செய்தியாக வெளியாகி உள்ளது. தினமணி இச்செய்தியை சற்றே பெரிதாக வெளியிட்டுள்ளது. பிற பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவில்லை.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஏப்ரல் 10 அன்று நெல்லை பாளை தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்ற தகவல், தினகரனில் மட்டும் இடம் பெற்றுள்ளது.
தலித் தலைவர்கள் தொடர்பான செய்திகளுக்கு மீண்டும் மீண்டும் இடம் மறுக்கப் படுகிறது என்று கருத இடமிருக்கிறது.

6. விஜயகாந் 4.4.2006 அன்று சென்னையில் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரையை, தினகரன், தினமலர், தினமணி ஆகியவை வெளியிட்டுள்ளன. தினத் தந்தி இச்செய்தியை வெளியிடவில்லை. வைகோ ஏப்ரில் 5 அன்று மவுன விரதம் இருப்பதாக தினமலர் மட்டும் செய்தி வெளியிட்டிருக்கிறது. தனது தந்தையின் நினைவு நாளான ஏப்ரல் 5 அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மவுனம் காப்பார் என்ற செய்தி வேறு இதழ்களில் இடம் பெற வில்லை.

7. வைகோ, தி மு க மத்திய அமைச்சர்கள் மீது குற்றஞ் சாட்டிப் பேசியதை, தினகரன் வெளியிடவில்லை. தினமலரும், தினத் தந்தியும் புகைப் படத்துடன், மிக விரிவாக இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. தினமணியில், 2 காலம் செய்தியாக, நன்கு செம்மையாக்கப் பட்டு வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தியைத் தினமலரும், தினத் தந்தியும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதாகக் கருத முடியும்.

வைகோ பற்றி கருணாநிதி, "குற்றமுள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்", என்று வெளியிட்டுள்ள அறிக்கையை தினகரனும், தினமலரும் வெளியிட்டுள்ளன. தினத் தந்தியும், தினமணியும் வெளியிடவில்லை.


கருணாநிதியை நோக்கி உடுமலைப்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ, எழுப்பிய கேள்விகளை, தினத்தந்தி விரிவாக வெளியிட்டுள்ளது. முதன் முறையாக, தினமலர், வைகோவின் உடுமலைப் பேட்டைப் பேச்சை வெளியிடாமல் தவிர்த்துள்ளது.
இந்த ஆய்வைத் தொடங்கிய முதல் வாரத்தின் இறுதியில், 4 செய்தித் தாள்களும் என்ன விதமான கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளன என்பதைக் "கண்டு" கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில், நேர்மையும், சுய ஒழுக்கமும் கொண்ட ஒரு பத்திரிகை ஒன்று கூட இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களாகிய எங்களிடம் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கிவிட்டிருக்கிறது.
இன்று 5 4 2006 புதன் கிழமை, தி இந்து ஆங்கில நாளிதழில் ஒரு செய்தியை நாங்கள் கவனித்தோம். இத்தாலியில் உள்ள தகவல் தொடர்பு ஆணையம், அந்த நாட்டுப் பிரதமர் சில்வியோ பெலிஸ்கோனிக்குச் சொந்தமான தொலைக்காட்சிக் குழுமத்திற்கு, 2.5 லட்சம் யூரோக்களைத் தண்டம் விதித்துள்ளது என்பதே அந்தச் செய்தி. பெர்லிஸ்கோனிக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம், பொதுத் தேர்தலின் போது அதன் முதலாளியான பெர்லிஸ்கோனிக்குச் சாதகமாக, மீண்டும், மீண்டும் அவரைக் காட்சிப் படுத்தியதே இந்தத் தண்டத்துக் காரணம் என்று அந்தச் செய்தி கூறுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களையும் துணிவுடன் தண்டிக்க முடிவு செய்த அந்த நாட்டு தகவல் தொடர்பு ஆணையத்தின் முடிவு எங்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

ஊடக விமர்சனக் குழுவிற்காக,
இசை செல்வப்பெருமாள்

Monday, April 03, 2006

தலித் குரலைப் புறக்கணிக்கும் தினமலர், தினகரன்

ஏப்ரல் 4 அன்று வெளியான நாளிதழ்களில் இருந்து 8 செய்திகளை ஆய்வு செய்யலாம்.
1. புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தினத்தந்தி செய்தியையும், பட்டியலையும் கடைசிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தினமணி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்ட செய்தியை முதல் பக்கத்திலும், பட்டியலை உட்பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. தினமலரும் தினகரனும் செய்தியை மட்டும் வெளியிட்டு, பட்டியலை இருட்டடிப்பு செய்து விட்டன. ஒரு முக்கிய கட்சியின் வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிடாமல் புறக்கணிப்பது அறமா?

2. கருணாநிதியின் பிரச்சாரத் திட்டம்: ஏப்ரல் 9 அன்று தொடங்கும் கருணாநிதியின் பிரச்சாரத் திட்டம் குறித்த செய்திகளை 4 நாளிதழ்களுமே வெளியிட்டுள்ளன. ஆய்வைத் தொடங்கிய பின் கடந்த 4 நாட்களில், ஆய்வுக்குட்படுத்தப் பட்டு வரும் 4 நாளிதழ்களுமே வெளியிட்ட ஒரே செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

3. விஜயகாந் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் தினமலரில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் பட்டுள்ளது. தினமணியில் பட்டியல் இடம் பெற்றுள்ளது. தந்தியும், தினகரனும் இச்செய்தியையோ, பட்டியலையோ வெளியிடவில்லை.

4. ஜெயலலிதாவின் நாகப் பட்டிணம், மயிலாடுதுறை பிரச்சாரம், தினமலரில் இடம் பெறவில்லை. தினகரன், தினத் தந்தி, தினமணி இச்செய்தியை வெவ்வேறு அளவுகளில் வெளியிட்டுள்ளன.

5. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில், தினத் தந்தியில் விரிவாகவும், தினமணியில் சுருக்கமாகவும் வெளியாகி உள்ளது. தினகரன் இந்த அறிக்கையை வெளியிடவில்லை.
ஆனால், பன்னீர் செல்வத்தின் அறிக்கைக்கு, கருணாநிதி அளித்துள்ள மறுப்பு அறிக்கை, தினகரனில் விரிவாகவும், தினமலரிலும், தினமணியிலும் சுருக்கமாகவும் இடம் பெற்றுள்ளன. தினத் தந்தி கருணாநிதியின் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட வில்லை.

6.மன்னிப்புக் கேட்க மாட்டேன், என்று வைகோ, மதுரையில் பேசிய பேச்சு, தினமலரில் மிகப் பெருமளவில் முக்கியத்துவம் தரப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. 8 பத்திச் செய்தியாக இது வெளியாகி உள்ளது. இச்செய்தி தினகரனில் இடம் பெறவில்லை. தினமணியிலும் இச்செய்தி இடம் பெறவில்லை. தினத் தந்தி விரிவாக இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

7. வைகோவின் பெயரைக் குறிப்பிடாமல், உடன் பிறப்புகளுக்கு, கருணாநிதி எழுதியுள்ள கடிதம், தினகரனில் முழுமையாகவும், தினமணியில் சுருக்கமாகவும் இடம் பெற்றுள்ளன. தினத் தந்தியிலும், தினமலரிலும் இக்கடிதம் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை.

8. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தினமலரிலும் தினத்தந்தியிலும் லீட் ஸ்டோரியாக வெளியாகி உள்ளது. தினமலரில், உளவுத் துறை என்று மட்டும் மேற்கோள் காட்டி, வேறு எந்த ஆதாரமும் சுட்டிக் காட்டப் படாமல், பட்டியலில் குழப்பம் நிலவுவதாக இச்செய்தி அமைந்துள்ளது.

இந்த 4 நாட்களும் ஆய்வு செய்ததில் இருந்து எங்களுக்கு எழும் கேள்விகள்:

1. பப்ளிக் ஸ்பியர் என்று சொல்லப்படுவது இன்றைய நாளிதழ்களுக்குப் பொருந்தாதா?

2. செய்திகளை மேற்கோள் இன்றி எழுதுவது, இருட்டடிப்பு செய்வது, தமது விருப்புகளுக்கு உட்பட்ட செய்திகளை மட்டும் வெளியிடுவது என்று தேர்தல் செய்திகளை வெளியிடுவது அறமாகுமா?

3. அண்டை மாநிலங்களில் குறிப்பாக கேரளத்தில் நிலவரம் எப்படி?

4. அருந்ததி ராய், "புஷ்ஷே திரும்பிப் போ", என்று கூக்குரலிட்டு எழுதிய கட்டுரையில், இந்தியப் பத்திரிகைகளை, கார்ப்பொரேட் பிரஸ் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் நாளிதழ்களில் எதுவுமே இந்தக் குற்றச் சாடிலிருந்து தப்பிக்க முடியாதோ என்ற கேள்வி எழுகிறது.

இன்னும் 32 நாட்கள் பிரச்சாரம் நடக்க வேண்டியுள்ளது. அதன் முடிவில் எங்களுக்குத் தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள சில தகவல்கள் இந்த ஆய்விலிருந்து கிடைக்கும் என்று நம்புகிறோம்.

Sunday, April 02, 2006

அதிகரித்து வரும் பக்கச் சார்பு

ஏப்ரல் 03 அன்று வெளியான நாளிதழ்களில் இருந்து 6 செய்திகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன:

1. கருணாநிதியின் அறிக்கை
2. வைகோவின் தென் மாவட்டப் பிரச்சாரம்
3. ஜெயலலிதாவின் வட மாட்டப் பிரச்சாரம்
4. சரத் குமார் ரசிகர் மன்றத்துத் தீர்மானம்
5. சீத்தாராம் யெச்சூரியின் தென் மாவட்டத்துப் பிரச்ச்சாரம்
6. விஜய்காந்தின் வட மாவட்டத்துப் பிரச்சாரம்

இந்த ஆறு செய்திகளையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ள நாளிதழ் எதுவுமே தமிழகத்தில் இல்லை என்ற முடிவை எடுக்கலாம்..

1. கருணாநிதியின் அறிக்கையை தினத் தந்தி வெளியிடவில்லை. தினமலரில் அறிக்கை வெளியான வடிவில், ஒரு எள்ளலுடன், முழுவதும் வெளியிடப் பட்டுள்ளது. தினகரன் இந்த அறிக்கையை லீட் ஸ்டோரியாக்கி இருக்கிறது. தினமும் யார் எந்தச் செய்தியை லீட் ஸ்டோரியாக்குகிறார்கள் என்பதே அந்தந்த நாளிதழின் அரசியல் நிலைப் பாட்டை அமபலப் படுத்தும் என்று முடிவு செய்ய இந்த அலசல் உதவுகிறது. தினத் தந்தி யேன் இந்த அறிக்கையை வெளியிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அறிக்கையில் இடம் பெற்ற தகவல்கள், தினமலர் வெப்சைட்டிலிருந்து அப்படியே தரப் படுகிறது:

“இலவசமாக "கலர் டிவி' வழங்குவது எப்படி?*5ம் தேதி விளக்கம் அளிப்பேன் என்கிறார் கருணாநிதி
""இலவசமாக "கலர் டிவி' எப்படி வழங்கப்பட இருக்கிறது என்பது பற்றி வரும் 5ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் விளக்குவேன்,'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களைச் சந்திக்காத நாட்களில், நிருபர்கள் கேட்பது போன்று அவரே கேள்வி தயார் செய்து, அதற்கு பதிலும் அளித்து பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார். அப்படி அவர் நேற்று அனுப்பிய "கேள்வி பதில்' அறிக்கை:

தனக்கு தலைமை வழங்கிய பதவியை அனுபவித்த சிலர், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை என்றதும், கட்சி தாவியிருக் கிறார்களே; அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அந்த "நபர்'களுக்காக நேரிலும், கடித மூலமும் எனக்குப் பரிந்துரை செய்து வேண்டுகோள் விடுத்த நண்பர்கள், இப்போதாவது உணர்ந்து கொள்வார்கள். நான் முன்கூட்டியே கட்சி எனும் இந்தக் கழனியில் "களை' பெருகிவிடாமல் தடுத்துக் காப்பாற்றத் தான் துரோகத்தை துளிர்த்திட விடாமல் துணிந்து முடிவெடுத்து இருக்கிறேன் என்பதை; இல்லையேல் தோளில் உட்கார்ந்து கொண்டே முதுகில் குத்தியிருப்பார்களே.

ரேஷனில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கும், "கலர் டிவி' இலவசமாகவும் வழங்குவதாக கூறியிருப்பது, தேர்தலில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் தாய்மார்களை ஏமாற்றுகிற உறுதிமொழி என சிலர் எழுதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

இப்பொழுது "ரேஷன் அரிசி' மானியம் வழங்கி, மக்களுக்கு அளிக்கப்படுவதில், மேலும் சற்று அதிகமாக மானியம் அளித்து கிலோ இரண்டு ரூபாய் என்று தந்திட எந்தத் தடையும் வரப் போவதில்லை. ஆட்சிக்கு வந்தால், அக்கணமே நியாய விலைக் கடைகளில் அரிசி விலை கிலோ இரண்டு ரூபாய் என்று அறிவிப்பு வெளிவரும். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி எப்படி வழங்கப்பட இருக்கிறது என்பதை சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெறுகிற அனைத்துக் கட்சித் தேர்தல் பிரசார துவக்கப் பொதுக் கூட்டத்தில் விளக்க இருக்கிறேன்.

பதவி கிடைக்காமல் கட்சியை விட்டுப் பிரிந்து போகிறவர்கள் தி.மு.க.,வை குறை கூறி, குற்றம்சாட்டி கூச்சல் போடுவதை எவ்வாறு உணருகிறீர்கள்?

அஜீரணம் காரணமாக வயிறு குடைந்து கொண்டிருக்கும் போது, சப்தத்துடன் இரண்டு "ஏப்ப'மாக காற்று வெளியேறிய பிறகு, அப்போது மனிதனுக்கு "அப்பாடா' என்று ஒரு மன நிம்மதி அவன் முகத்தில் தெரியும். அது போலத் தான் உணருகிறேன்.

தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் அனைத்திலும் தனது ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை என்று ஒன்றிரண்டை ஜெயலலிதா குறிப்பிடுகிறாரே?

உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்தோம் என்று முதல் சாதனையாகச் சொல்லுகிறார். உண்மையிலேயே உழவர் பாதுகாப்புக்காக தி.மு.க., ஆட்சியின் போது "உழவர் சந்தை' திட்டம் கொண்டு வரப்பட்டு, ஒரே ஆண்டில் தமிழகம் முழுவதும் நுõற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தையே ஒழித்து விட்டு, நான்காண்டு முடிந்து தேர்தல் வருகிறது என்றதும் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற ஒன்றை அறிவித்திருப்பதே ஒரு சாதனையல்ல என்பதை உழவர்கள் நன்கு உணர்வார்கள். இலவச சைக்கிள் உண்மையிலேயே மனதார மாணவர் களுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல. அந்த சைக்கிள்களை வாங்கியதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது என்பதை அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறேன்.

பெண்கள் மேம்பாட்டுக்காக பெண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்துள்ளதாக ஜெயலலிதா கூறுகிறாரே?

பெண்கள் சுய உதவிக் குழுக்கள் 1989ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நான் முதல்வராக இருந்த போது தர்மபுரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்ட திட்டம்.

நுழைவுத் தேர்வு கிடையாது என்று தமிழக அரசு செய்த அறிவிப்பைக் கேட்டு மணவர்கள், அந்தத் தேர்வுக்காக படிக்காமல் இருந்து விட்டார்கள். தற்போது திடீரென நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகச் சொல்கிறார்களே?

மாணவர்களைப் பற்றி கவலைப்படுவதற்கு ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை என்பது தான் உண்மை. நுழைவுத் தேர்வில் இப்படிப்பட்ட குளறுபடிகள் என்றால், பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றில் கேள்வித் தாள்களிலே பல குளறுபடிகள். குழப்பம், குளறுபடி ஆகியவற்றுக்கு உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசின் கல்வித் துறை.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்”.

வைகோவின் பிரச்சாரப் பேச்சுக்களை தினகர ன் வெளியிடவில்லை. தினத் தந்தியும், தினமலரும், வைகோவின் பேச்சுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை மிக விரிவாக தினத் தந்தியும், மிகச் சுருக்கமாக தினகரனும் வெளியிட்டுள்ளன.

சீத்தாராம் யெச்சூரியின் பிரச்சாரத்தை எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன.

வைகோ, தயாநிதி மாறன் குறித்துப் பேசியதற்கு மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரப் போவதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார், தயாநிதி. இந்த அறிக்கை தினகரனில் மட்டுமே வெளியாகி உள்ளது. தினமணி கூட இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

ஆனால், இந்த அறிக்கைக்கு வைகோ தெரிவித்திருக்கும் மறுப்பை தினத் தந்தி விரிவாக வெளியிட்டுள்ளது. தினமலர் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

சரத் குமார் ரசிகர் மன்றத்தின் ஒரு தீர்மானத்தை லீட் ஸ்டோரியாக்கியிருக்கிறது தினமலர். இதே செய்தியை தினத் தந்தியும் விரிவாக வெளியிட்டிருக்கிறது. இது பற்றிய செய்தி தினகாரனில் இடம் பெறவ்வில்லை.
சரத் குமார் ரசிகர் மன்றத்தின் அறிக்கையை பக்கச் சார்பில்லாமல், மிகைப் படுத்தாமல் தினமனி செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தி அப்படியே தரப் படுகிறது:

திமுகவுக்கு எதிராகப் போர்கொடி: பிரசாரம் செய்வதில்லை என சரத்குமார் ரசிகர் மன்றம் முடிவு
சென்னை, ஏப். 3: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதில்லை என்று அகில இந்திய சரத்குமார் ரசிகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இது தொடர்பான தனது முடிவை சரத்குமார் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
அகில இந்திய சரத்குமார் ரசிகர்கள் தலைமை நற்பணி மன்றத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
1996-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அல்லும் பகலும் பாடுபட்டு தனது உடலை வருத்தி உண்மை உணர்வோடு தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றியையும் தேடித்தந்தார் சரத்குமார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்துள்ளார். ஆனால் அவரது உழைப்புக்கும் அறிவுக்கும் ஏற்ற உரிய மதிப்பு, மரியாதையை திமுக இதுவரை அவருக்குக் கொடுக்கவில்லை என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
எங்களது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திமுக கூட்டணியை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்யக் கூடாது.

இந்த தீர்மானத்தை சரத்குமாருக்கு அனுப்பி வைத்து அவர் எடுக்கும் இறுதி முடிவுக்கு மன்றம் கட்டுப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரசிகர் மன்ற தலைவர் சுந்தரேசன் கூறியதாவது:
பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி, திருவள்ளூர், தேனி, நாங்குநேரி, நாகர்கோயில் ஆகிய தொகுதிகளை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் சரத்குமார் வேண்டுகோள் விடுத்தார். இதில் ஒருவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை.
அதோடு சரத்குமாரை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகின்றனர். இதனால் திமுக மாநாட்டில் கூட ரசிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் விஜய்யை அழைத்து தபால்தலை வெளியிட்டனர். ஆனால் எம்.பி.யாக உள்ள சரத்குமாரை அழைக்காமல் அவமரியாதை செய்துவிட்டனர்.
ரசிகர்கள் ஆவேசம்: திமுகவைப் புறக்கணிப்போம் என்று கோஷமிட்டனர்.
ரசிகர்கள் முடிவு குறித்து சரத்குமாரின் கருத்து கேட்டபோது, இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

_______________

தொடரும் இருட்டடிப்பு ... ஒரு பக்கம் சார்ந்து எழுதும் போக்கை உறுதி செய்யும் ஆதாரம்


இன்று [02 04 2006] ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுபவை 4 செய்திகள்:
1. வைகோவின் சன் டி வி - தினகரன் தொடர்பான பேச்சுக்கு, தினகரனின் தன்னிலை விளக்கம்
2. ஜெயலலிதாவின் விழுப்புரப் பிரச்சாரம்
3. வைகோவின் நாசரேத், திருச்செந்தூர் பேச்சு
4. கருணாநிதி குறித்து நெல்லை கண்ணனின் பேட்டி

1. வைகோவின் சன் டி வி - தினகரன் தொடர்பான பேச்சுக்கு, தினகரனின் தன்னிலை விளக்கம்:
இன்றைய தினகரனின் 8ஆம் பக்கத்தில் தினகாரன் ஒரு முழுப் பக்க தன்னிலை விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தினகரனின் வெப்சைட்டில் இதை முழுமையாக வாசிக்கலாம். வைகோ என்ன பேசினார் என்பதையே வெளியிடாமல், அவர் பேச்சுக்கு இவ்வளவு பெரிய மறுப்புரை வெளியிடுவது சரியா? அவர் என்ன பேசினார் என்பதை பேசிய அன்றே வெளியிட்டிருக்கலாமே? இதை எழுதியது யார்? தினகரன் ஆசிரியரா? சன் டி வி யின் அதிபரா? பத்திரிகையாளரா? எந்தக் குறிப்பும் இல்லாமல் ஒரு செய்திக் கட்டுரையைப் போல வெளியிட்டிருப்பது அறமா?

2. ஜெயலலிதாவின் விழுப்புர பிரச்சாரம்: இன்றைய தினகரன் இந்தச் செய்தியை முழுமையாக இருட்டடிப்புச் செய்து விட்டது. தினமலர் அரை குறையாக வெளியிட்டுள்ளது. தினத்தந்தி விரிவாக வெளியிட்டுள்ளது. தினமணி விழுப்புரத்துப் பிரச்சாரத்தைப் பதிவு செய்துள்ளது.

3. தினமலர் திருநெல்வேலி பதிப்பு 2 4 2006 பக்கம் 20ல் "அ தி மு க வுடன் கரம் கோர்த்தது ஏன்? திருச்செந்தூரில் வைகோ ஆவேசம்", என்ற செய்தி 33 செ மீ நீளம், 4 காலம் அகலம் 3 காலம் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. அதே நாளிதழின் 19ஆம் பக்கத்தில் "மதிமுகவினர் என்ன கொத்தடிமைகளா.. கருணாநிதி மீது வைகோ பாய்ச்சல்", என் ற செய்தி 13.5 செ மீ நீளம் 8 காலம் அகலத்தில் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தி தினமலர் வெப்சைட்டில் இடம் பெற வில்லை.

தி மு க கூட்டணி பிரச்சாரம் ஆரம்பித்ததும் பிரச்சர செய்திகள் எவ்வளவு வெளியிடப் படுகின்றன என்பதைக் கவனித்து தான் இது குறித்த விமர்சனத்தை முன் வைக்க வேண்டும்.
தினமணி வைகோவிடம் பிரத்யேக பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. தினகரனில் இந்த 2 உரைகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

4. கருணாநிதி குறித்து நெல்லை கண்ணனின் விரிவான பேட்டி இன்றைய தினமலரில் இடம் பெற்றுள்ளது. கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்த பேட்டி. இதே போல பிற தலைவர்களையும் விமர்சிக்கும் பேட்டிகள் தினமலரில் இனி வரும் நாட்களில் இடம் பெறுவதை வைத்துத் தான் இந்த பேட்டியின் உள்நோக்கம் குறித்துச் சொல்ல முடியும்.
________

Day 1 posted on April 01 2006

செய்தியை இருட்டடிப்புச் செய்யலாமா? மேற்கோள் இல்லாமல் செய்தி எழுதுவது அறமா?

ஏப்ரல் 01 2006 அன்று வெளியான செய்திகளில் 3 செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

1. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
2. விஜயகாந் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்
3. கலிங்கப்பட்டியிலிருந்து வைகோ பிரச்சாரத்தைத் தொடங்கினார்

இதில், ஜெயலலிதா பிரச்சாரம் தொடங்கியது பற்றி தினத் தந்தி, தினமலர், தினமணி, தினகரன் ஆகிய 4 நாளிதழ்களும் செய்தியை வெளியிட்டுள்ளன.

விஜயகாந் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தகவல் தினமலரின் லீட் ஸ்டோரியாக வெளியாகி உள்ளது. இதில் எந்த நபரையும் மேற்கோள் காட்டாமல், பொதுவாக ரசிகர்கள் என்று மட்டும் மேற்கோளாகக் காட்டி சில தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. தினமலர் செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கீழே தரப் படுகின்றன:

"இப்படி இரு பெரிய அணிகளுமே வலுவாக உள்ள இந்த தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வன்னியர் ஓட்டுக்களை இரு அணிகளின் வன்னியர் வேட்பாளர்கள் பிரிக்கும் பட்சத்தில் இதர ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறலாம் என்ற கணக்கில் விஜயகாந்த் இந்த தொகுதியை தேர்வு
செய்திருக்கலாம் என பா.ம.க.,வினர் கருதுகின்றனர். உண்மையில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெரிதும் நம்பியே விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.


பா.ம.க.,வுக்கு சவால் விடும் வகையில் அவர்களது கோட்டையிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் திட்டம் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஜயகாந்துக்கு இப்பகுதிகளில் அதிகளவு ரசிகர்கள் உருவாகி வந்ததால் தான் அவருடன் மோதல் போக்கை ஆரம்பத்திலேயே பா.ம.க., துவக்கியதாக
கூறப்படுகிறது. மேலும், கட்சியை துவக்கி தமிழகம் முழுவதும் பிரசாரத்தை விஜயகாந்த் ஆரம்பித்த போது விருத்தாசலத்தில் தான் அதிக அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. இதன் காரணமாகவே இந்த தொகுதியை அவர் தேர்வு செய்ததாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த தொகுதியில் இவருக்கு அதிகளவு ரசிகர் மன்றங்களும் உள்ளன. இதில், அதிக அளவிற்கு வன்னியர்கள் தான் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு விஜயகாந்த் போட்டியிட வேண்டுமென 15 பேர் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே, இரண்டு நாட்கள் இந்த தொகுதியை விஜயகாந்த் சுற்றி வந்தாலே அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்".

இவ்வாறு செய்தி எழுதுவது, உள்நோக்கம் கொண்டதாகக் கருத இடமுண்டு அல்லவா? செய்தி வேறு, எண்ணம் வேறு அல்லவா? இது அறமா?

இன்று வெளியான தேர்தல் குறித்த செய்திகளில் முக்கியமான ஒன்று வைகோவின் பிரச்சாரம் கலிங்கப் பட்டியில் தொடங்கப் பட்டதாகும். தேசிய ஆங்கில நாளேடான தி இந்து நாளிதழ் இது குறித்து 3 பத்திகளில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தினகரனில் இடம் பெறவில்லையே ஏன்? இதை உள்நோக்கம் கொண்டது என்று கருத இடமுண்டு அல்லவா? இது இருட்டடிப்பு ஆகாதா?

இதழியல் மாணவர்களின் பதிவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் மாணவர்களாகிய நாங்கள், எமது பட்டப் படிப்பின் ஒரு பயிற்சியாக இந்த வலைப்பூவைத் தொடங்குகிறோம்.

தேர்தல் பிரச்சாரத்தை முக்கிய தலைவர்கள் தொடங்கி விட்டார்கள். 01 04 2006 தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப் படும் வரை இந்த வலைப் பூவைத் தொடரத் திட்டமிட்டிருக்கிறோம். எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம். இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம். குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல் போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக் கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய அக்கறையாக இருக்கும். இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
திருநெல்வேலி மாநகரிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும், தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் ஆகிய நான்கு நாளிதழ்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவது என்று தீர்மானித்திருக்கிறோம்.

எமது விமர்சனங்கள் குறித்த, தமிழ் சமூகத்தின் எதிர்வினையை மிகுந்த ஆர்வமுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்.

ஆர்வமுடன்,

தேர்தல் ஊடக விமர்சனக் குழுவினர்

_________